2 வருட உழைப்பு.. 'மெகா' ஸ்க்ரிப்ட்.. 'சிம்பு' ஹீரோ - காற்றில் கரைந்த கே.வி.ஆனந்த் கனவு!
சென்னை: ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்தின் மறைவு தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை உலுக்கிவிட்டது. அவர் அடுத்ததாக எடுக்கவிருந்த படம் என்ன தெரியுமா?
கொரோனா 2வது அலையில் நாடு சிக்கி அல்லாடிக் கொண்டிருக்க, நம் மனதுக்கு நெருக்கமான பலரை நாம் அடுத்தடுத்து இழந்து வருகிறோம். இதில், சிலர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்றாலும், சென்ற வருடத்தில் இருந்து நாம் இழந்து வரும் பிரபலங்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. இயக்குனரும், நடிகருமான விசு இறந்தது எத்தனை பேருக்கு தெரியும்?
சமீபத்தில் நடிகர் விவேக், இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் தாமிரா போன்றவர்களை நாம் அடுத்தடுத்து இழந்த நிலையில், இப்போது கே.வி.ஆனந்தையும் பறிகொடுத்திருக்கிறோம்.

எகிறிய ஜீவா மார்க்கெட்
2005-ஆம் ஆண்டு வெளிவந்த 'கனா கண்டேன்' திரைப்படத்தின் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். அதன் பிறகு, யாருமே எதிர்பார்க்காத வகையில், சூர்யாவை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் கதையாக அவர் இயக்கிய 'அயன்' சூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் மார்க்கெட் அடுத்த லெவலுக்கு உயர்ந்தது. பிறகு, ஜீவாவை வைத்து அவர் இயக்கிய 'கோ' ஜீவாவின் மார்க்கெட்டை 'கிரேட் 1' ஹீரோ லெவலுக்கு கொண்டுச் சென்றது.

ஏதோ ஒரு வகையில்
பிறகு, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட அவர் இயக்கிய அனைத்து படங்களும் ஏதோவொரு வகையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி, செல்லமே, பாய்ஸ், விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரே ஸ்க்ரிப்ட்
சூர்யாவின் காப்பான் படத்திற்கு பிறகு, எந்த படமும் அவர் இயக்காமல் இருந்து வந்தார். அதேசமயம், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு ஸ்க்ரிப்ட்டை எழுதிவந்த கே.வி.ஆனந்த், சமீபத்தில் தான் அதனை நிறைவு செய்திருந்தார். இதுவரை தான் இயக்கிய படங்களில், தி பெஸ்ட் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் உருவாக்கிய ஸ்க்ரிப்ட் இது.

கே.வி.ஆனந்த் ஹேப்பி
முழு ஸ்க்ரிப்ட்டையும் தயார் செய்து அவர் ஹீரோக்களுக்கு கதை சொல்லி வந்தார். இதில், இறுதியாக சிம்பு ஹீரோவாக நடிப்பது என்று உறுதியானதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு தெரிவிக்கப்பட்டது. சிம்புவிடம் முழு கதையையும் சொல்ல, ஸ்க்ரிப்ட் அவருக்கு மிகவும் பிடித்துப் போக, கே.வி. - சிம்பு இணை இறுதி செய்யப்பட்டதாம். ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்கவிருந்ததாகவும் நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.

எல்லாம் முடிந்துவிட்டது
அதுமட்டுமின்றி, இதுகுறித்த முறையான அறிவிப்பை இரண்டு வாரங்களில் வெளியிடலாம் என்றும், பிறகு ஜூன் இறுதியில் அல்லது ஜுலையில் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்றும் கே.வி. ஆனந்த் முடிவு செய்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அவர் மறைந்து போக ஒட்டுமொத்த கனவும் கலைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications