25 வயசுதான்.. விமானத்திலேயே சுருண்டு விழுந்த விமான பணிப்பெண்.. காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மக்கள்
கிரேட்டா மயக்கமடைந்த நிலையில் அவரை எழுப்ப பயணிகள் முயன்றனர். ஆனால் கடைசி வரை அவரால் எழ முடியவில்லை.
லண்டன்: கடந்த டிசம்பர் மாதம் லண்டனில் விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில் அதிலிருந்த பணிப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அப்பெண்ணுக்கு அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு வகையான புதிய நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நோய்கள் திடீர் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. சரியாக சொல்வதெனில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர்தான் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதையே கண்டுபிடிக்க முடிகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த டிசம்பர் மாதம் லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் ஏர் அல்பேனியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கியது.
இந்த விமானத்தில் கிரேட்டா டைர்மிஷி என்ற 24 வயதான இளம்பெண் கேபின் க்ரூவாக பணியாற்றி வந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அப்பெண் கீழே சுருண்டு விழுந்திருக்கிறார். சக பயணிகள் அவரை எழுப்பி அமரவைக்க முயன்றுள்ளனர். ஆனால் கிரேட்டாவை எழுப்ப முடியவில்லை. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து முதலுதவி செய்தனர்.

அரிய வகை நோய்
அப்படியும் இப்பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த உயிரிழப்புக்கான காரணத்தை நீதிமன்றம் விளக்கியுள்ளது. அதாவது கிரேட்டா உயிரிழந்ததற்கு மாரடைப்பு காரணமில்லை என்பதை உடற்கூறாய்வு அறிக்கைகள் தெளிவுப்படுத்தியுள்ளன. மேலும் கிரேட்டாவுக்கு ' வயது வந்தோருக்கான திடீர் இறப்பு நோய்'(sudden adult death syndrome) பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

விசாரணை
இது குறித்து விரிவாக கூறிய விசாரணை அதிகாரி மைக்கேல் பிரவுன், "கிரேட்டா முதலில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் விமான முனையத்திலிருந்த ஊழியர்கள் சிபிஆர் முதலுதவி அளித்துள்ளனர். சரியாக 10 நிமிடங்களுக்கு பின்னர் அவருடைய இதய துடிப்பு நின்றுவிட்டது. அவருக்கு சிகிச்சையளித்த ஊழியர்கள் உயிரிழப்பை உறுதி செய்தனர். அவர் திடீர் இறப்பு நோயால் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு மிகவும் அரிதானதாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் மட்டும் இந்நோயால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரணம்
இதில் சோகம் என்னவெனில் திடீரென உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர்தான் இந்த நோயால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நோயிலேயே 6 வகைகள் இருக்கின்றன. இந்த 6 வகைகளில் சில நோய்கள் 2000 பேரில் ஒருவருக்கு இருக்கிறது. ஆனால் வேறு சில நோய்கள் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அமெரிக்காவை பொறுத்த அளவில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் மாரடைப்பால் 2 பேர் உயிரிழக்கின்றனர். அதேபோல இந்த திடீர் இறப்பு நோய் காரணமாக சுமார் 4,000 பேர் உயிரிழக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

இரங்கல்
கிரேட்டாவின் மரணம் எங்களுக்கு பெரிய இழப்பு என கிரேட்டாவின் சக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதேபோல ஏர் அல்பேனியாவும் கிரேட்டாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த மரணம் இயற்கையானது என்று நீதிபதிகள் கூறியுள்ள நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications