மனைவியிடம் கூட பேசுவது இல்லை.. தனி அறையில் தவிக்கிறேன்.. ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பியவர் வேதனை
லண்டன்: ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணியான விஸ்வாஸ் குமார் ரமேஷ் விபத்து நடைபெற்று 5 மாதங்கள் ஆகியும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறாராம். தனி அறையில் வீட்டில் இருக்கும் ரமேஸ், ஐந்து மாதங்களாக வேதனையின் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கியது. உலகையே உலுக்கிய இந்த விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏனைய 241 பயணிகளும் உயிரிழந்தனர்.

ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்
விமானத்தில் பிசினஸ் கிளாஸில் 11A இருக்கையில் அமர்ந்து பயணித்த இங்கிலாந்தைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்தார். அவருடன் அமர்ந்து பயணித்த அவரது சகோதரரும் இந்த விமான விபத்தில் பலியானார். விபத்திற்குப் பிறகு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஸ்வாஸ் குமார் தற்போது இங்கிலாந்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
விபத்து நடைபெற்று 5 மாதங்கள் ஆன நிலையில், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவதிப்படுவதாக விஸ்வாஸ் குமார் ரமேஷ் கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் ரமேஷ் கூறியதாவது:-
தனியாக இருக்கவே விரும்புகிறேன்
"விமான விபத்தில் எனது சகோதரரை நான் இழந்துவிட்டேன். மிகப்பெரிய வெற்றிடத்தை அவரது இழப்பு ஏற்படுத்திவிட்டது. எனது சகோதரர் எனக்கு முதுகெலும்பு போல இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். தற்போது வீட்டில் உள்ள எனது அறையில் நான் தனியாகவே இருக்கிறேன்.
எனது மனைவியுடன் கூட நான் பேசுவதில்லை. எனது வீட்டில் தனியாக இருக்கவே விரும்புகிறேன். அந்த துயர சம்பவத்தில் இருந்து எனது குடும்பம் இன்னும் மீளவில்லை. என்னை பொருத்தவரை விபத்துக்குப் பிறகு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் மிகவும் கடினமான சூழலில் உள்ளேன்.
ஒவ்வொரு நாளையும் வேதனையிலேயே கடக்கிறோம்
கடந்த 4 மாதங்களாக எனது தாயார் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு யாருடனும் பேசாமல் உள்ளார். நானும் யாருடனும் பேசவில்லை, பேச விருப்பமும் இல்லை. அதிகம் அதைப் பற்றிப் பேசுவதில்லை. இரவு முழுக்க சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். மன ரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் எனது குடும்பம் வேதனையிலேயே கடக்கிறது."என்றார்.
விபத்துக்குப் பிறகு கடும் மன உளைச்சலால் (PTSD) அவதிப்பட்டு வரும் ரமேஷ், இந்தியாவில் சிகிச்சை பெற்றார். ஆனால் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் உள்ள வீட்டிற்கு திரும்பிய பிறகு சிகிச்சை பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தொழில் முடங்கிவிட்டது
ரமேஷுக்கு உதவி செய்து வந்த சமூக அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் படேல் கூறுகையில், "அவர்கள் தற்போது நெருக்கடியில் உள்ளனர். உயர்மட்ட அளவில் பொறுப்புள்ளவர்கள், அந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்க வேண்டும். டியூவில் அந்த குடும்பத்தினர் மீன் தொழிலை செய்து வந்தனர்.
தனது சகோதரருடன் அந்த தொழிலை ரமேஷ் நடத்தி வந்தார். விமான விபத்துக்குப் பிறகு அந்த தொழில் முடங்கிவிட்டது. ஏர் இந்தியா அவர்களுக்கு உதவ வேண்டும்" என்றார். ஏர் இந்தியா ரமேஷுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் அளித்துள்ளது. இந்த தொகையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், இந்த தொகை அவரது உடனடி தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications