இது மட்டும் நடந்தா லெவலே வேற.. இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்.. பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்ட பின்னர் முதல் முக்கிய வெளிநாட்டுப் பயணமாகப் பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
ஐரோப்பிய நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின. இதில் பிரிட்டன் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தது.
அதன் பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக அறிவித்தது. இது குறித்த வாக்குப்பதிவு, வணிக ஒப்பந்தம் ஆகியவை முடிவாகி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேற சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.

மோசமான நிலையில் பிரிட்டன்
கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனுபவிக்கும் சில வணிக சலுகைகளை இனி பிரிட்டனால் அனுபவிக்க முடியாது. ஏற்கனவே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டின் நிலையை இது மேலும் மோசமாக்கும்.

இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்
இதன் காரனாகப் பல நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது , முதலீடுகளைப் பெருக்குவது உள்ளிட்ட பணிகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பிரெக்ஸிட்க்கு பின் முதல் முக்கிய வெளிநாட்டுப் பயணமாக போரிஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியா வரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டன் வணிகம் செய்ய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியை விரைவுபடுத்தும் வகையில் அவர் இந்தியா வரவுள்ளார்.

பல்வேறு ஒப்பந்தங்கள்
போரிஸ் ஜான்சனின் இந்தப் பயணத்தின் போது வேலைவாய்ப்புகள், முதலீடு என பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் தனது வணிக வாய்ப்புகளைப் பெருக்க வரும் ஜூன் மாதம் ஜி 7 மாநாடு நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின பயணம்
முன்னதாக, ஜனவரி மாதம் குடியரசு தின விழாவிற்கே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவிருந்தார். இருப்பினும், அப்போது உருமாறிய கொரோனா பரவல் காரணமாகப் பிரிட்டன் நாட்டில் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரித்தது. இதனால் பிரிட்டன் நாட்டின் நிலைமையைக் கண்காணிக்க அவர், தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்திருந்தார். இப்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் இந்தியா வரவுள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications