பற்றி எரியும் பிரிட்டன்.. 13 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த வன்முறை.. போலி செய்தியால் பதற்றம்!
லண்டன்: இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறின. இதனால் பிரிட்டன் முழுக்க கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை போலீசார் பலரைக் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. இதனால் அங்குப் பரபரப்பான ஒரு சுழலே நிலவி வருகிறது.
பிரிட்டன் நாட்டில் கடந்த மாதம் தான் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானார்.

இதற்கிடையே தொழிலாளர் கட்சிக்குச் சிக்கல் தரும் வகையில் அங்கு இப்போது மிகப் பெரிய வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. அதைச் சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
என்ன காரணம்: கடந்த வாரம் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் நடன வகுப்பில் திடீர் தாக்குதல் நடந்தது. இதில் மூன்று சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரிட்டனில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதே இதுபோன்ற தாக்குதல்களுக்குக் காரணம் எனக் கூறி அங்கே பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன..
மூன்று சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த அந்த தாக்குதலில் கைதாகியுள்ள நபர் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர் என்றும் அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் தவறான தகவல் பரவியது. இதனால் குடியேற்றத்தை எதிர்க்கும் குழுக்கள் முஸ்லீம் எதிர்ப்பு குழுக்கள் திடீரென இந்த போராட்டங்களை ஆரம்பித்தன. அதுவே இப்போத வன்முறையாக மாறியுள்ளது.
விளக்கம்: அதேநேரம் இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் பிரிட்டனில் பிறந்தவர் தான் என்றும் போலீசார் விளக்கமளித்துள்ளனர். மேலும், கைதான நபரின் குடும்பம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதை ஏற்க மறுத்து அங்கே போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
அங்குள்ள லிவர்பூல், பிரிஸ்டல், ஹல் மற்றும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் மற்றும் பிளாக்பூல் எனப் பல நகரங்களில் இந்த வன்முறை போராட்டங்கள் பரவியுள்ளன. இந்த விவகாரத்தில் போலீசார் 85க்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்துள்ளனர். மான்செஸ்டர் மற்றும் பெல்ஃபாஸ்டில் தாக்குதல்கள் நடந்த நிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. லிவர்பூலில் ஒரு நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த வன்முறையில் போலீசார் பலரும் காயமடைந்துள்ளன.
வன்முறை: கடந்த வாரம் சிறுமிகள் படுகொலையைத் தொடர்ந்தே போராட்டங்கள் நடந்து வந்த போதிலும் அது நேற்று சனிக்கிழமை தான் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இதற்கிடையே தீவிர வலதுசாரி இயக்கங்கள் திட்டமிட்டு இந்த போராட்டங்களை நடத்துவதாக அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விமர்சித்துள்ளார்.
மேலும், சிறுமிகள் உயிரிழக்கக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு: பிரிட்டனைப் பொறுத்தவரைக் கடந்த 2011இல் கடைசியாக மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. அப்போது லண்டனில் கறுப்பினத்தவர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து பல ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிய போராட்டங்களை நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை வெடித்தன. இதற்கிடையே சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications