அடடே! எவ்வளவு சிம்பிளா இருக்காரு.. மக்களுடன் மக்களாக மெட்ரோவில் பயணித்த துபாய் பட்டத்து இளவரசர்
லண்டன்: இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்-ன் எளிமை அனைவரையும் வியக்கச் செய்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயின் பட்டத்து இளவரசராக உள்ளவர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம். 39 வயதாகும் இவருக்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர், எப்போதும் தனது அன்றாட நிகழ்வுகள், வளர்ப்பு விலங்குகள் குறித்து படங்களைப் பதிவிட்டு வருவார்.

பட்டத்து இளவரசர்
இதன் காரணமாகவே சுமார் 1.5 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவரை பின்தொடர்கின்றனர். துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் இப்போது தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறைக்காக லண்டன் சென்றுள்ளார். லண்டனில் இருந்தபடியே அவர் பல்வேறு படங்களைப் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் பதிவிட்டுள்ள ஒரு படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

லண்டன் மெட்ரோ
ஒட்டுமொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹம்தான் பின் முகமது யாருமே எதிர்பார்க்காத வகையில் லண்டனில் ஓடும் அன்டர்கிரவுண்ட் ரயிலில் பயணித்துள்ளார். நமது மெட்ரோ ரயில்களைப் போல லண்டன் அன்டர்கிரவுண்ட் ரயில் என்பது லண்டனை அதன் புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் சுரங்க ரயில் நெட்வொர்க் ஆகும்.

மக்களோடு மக்களாக
இப்போது இன்ஸ்டாகிராமில் வேகமாகப் பரவும் இந்தப் படத்தில் ஷேக் ஹம்தான் தனது நண்பருடன் நெரிசலான லண்டன் அன்டர்கிரவுண்ட் ரயிலில் நின்றபடி பயணிக்கிறார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த பட்டத்து இளவரசும் அவரது நண்பர் பத்ர் அதீஜ்ஜும் மக்களுடன் மக்களாக இணைந்து எளிமையாக ரயிலில் பயணித்ததைத் துபாய் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம்
அதேபோல அவர் பதிவிட்டுள்ள மற்றொரு படத்தில் துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமும் லண்டனில் விடுமுறைக்கு வந்துள்ள படத்தையும் பட்டத்து இளவரசர் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் அரசர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பட்டத்து இளவரசர் பகிர்ந்துள்ளார்.

பாராட்டு
துபாய் இளவரசரின் எளிமையான போக்கைப் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் இதேபோலத் தான் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முகமது யாருக்கும் தெரியாமல் லண்டனில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட லண்டனில் வசிக்கும் துபாய் மக்கள் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications