இன்னும் மூனு மாசத்துக்கு... யாரும் இந்த பக்கமே வரக்கூடாது... பிரிட்டன் பிரதமர் அதிரடி உத்தரவு
லண்டன்: கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள சர்வதேச விமான தடை, வரும் மே மாதம் 17ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் அங்குக் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற கொரோனா வகைகளை விட சுமார் 70% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டன் நாட்டை மிகப் பெரியளவில் பாதித்துள்ளது. இதன் காரணமாகக் கடந்தாண்டு இறுதியில் பிரிட்டன் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சர்வதேச போக்குவரத்து
அதேபோல சுற்றுலா போன்ற அத்தியாவசியமற்ற விமானப் போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மூன்று மாதங்கள் மேல் ஆகியுள்ளதால் விமான நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். வரும் கோடைக் காலத்திற்குள் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைப் பிரிட்டன் அரசு நீக்கும் என்று விமான நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன.

மூன்று மாதங்களுக்கு தொடரும்
இந்நிலையில், குறைந்தபட்சம் வரும் மே மாதம் 17ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலில் இருக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், "நாம் ஏற்கனவே இந்தாண்டின் இரண்டு மாதங்களை இழந்துவிட்டோம். கொரோனா பரவல் காரணமாக மேலும் இரு மாதங்களை நாம் இழக்கவுள்ளோம்.

ஏப்ரலில் முடிவெடுக்கப்படும்
பல விமான நிறுவனங்களும் வரவிருக்கும் கோடைக் காலத்தையே எதிர்நோக்கிக் காத்திருந்தன. ஆனால், கொரோனா பரவல் நம் நாட்டில் குறையவில்லை. இதனால் குறைந்தபட்சம் வரும் மே மாதம் 17ஆம் தேதி வரை இந்த போக்குவரத்து தடை தொடரும். எப்போது சர்வதேச போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை பெறப்பட்டு, ஏப்ரல் 12ஆம் தேதி முடிவு செய்யப்படும். இந்தாண்டு இறுதியில் விமான துறை மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பும் என நம்புகிறேன்" என்றார்.

விமான துறை
கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு துறையாக விமான துறை உள்ளது. கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவ தொடங்கியவுடன் பல்வேறு உலக நாடுகளுக்கும் விமானச் சேவைக்கு தடை விதித்தன. கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு விமானச் சேவைக்கு பல்வேறு நாடுகளும் அனுமதி அளித்துள்ளன. இருப்பினும், சர்வதேச விமானச் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. இதனால் பிரிட்டன் ஏர்வேஸ் போன்ற பல்வேறு பெரு விமான நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன.












Click it and Unblock the Notifications