இது தேவை தான்.. பாகிஸ்தான் மூக்கை உடைத்த ரிஷி சுனக்.. இந்தியா பக்கம் தான் நியாயம் இருக்கு என கருத்து
லண்டன்: பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் நியாயமானது. பயங்கரவாதிகளுக்கு எந்த காரணம் கொண்டும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

நம் நாட்டின் சார்பில் நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பறந்தன. அதில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நோக்கி வீசப்பட்டது.
மொத்தம் 25 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடந்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு துல்லியமாக வான்வழி தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டும் சிதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதை பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், இந்தியாவின் மருமகனுமான ரிஷி சுனக் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து தனக்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதலை ஏற்று கொள்ளாது. பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருப்பது நியாயமானது. பயங்கரவாதிகளுக்கு எந்த காரணம் கொண்டும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர் "பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் புதுமணத் தம்பதிகள், குழந்தைகள் மற்றும் மகிழ்ச்சியை தேடிய குடும்பங்களின் வாழ்க்கையை திருடிவிட்டுவிட்டது. அவர்களுக்காக எங்கள் இதயங்கள் உடைகின்றன. பிரிட்டன் ஒவ்வொருவரின் துக்கத்திலும் பங்கெடுத்து கொள்கிறது. இந்தியாவுன் ஒற்றுமையாக நிற்கிறது பயங்கரவாதம் ஒருபோதும் வெல்லாது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரிஷி சுனக் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் 2022 முதல் 2024 வரை பிரிட்டன் பிரதமராக இருந்தார். இவரது மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக், நம் நாட்டுடன் நல்ல உறவில் உள்ளார். அதேபோல் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக உள்ளார். பகவத்கீதை படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications