”கழுத்தை அறுத்துவிடுவேன்” இந்தியர்களை பார்த்து மிரட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி! லண்டனில் அதிர்ச்சி
லண்டன்: பஹல்ஹாம் பயங்கரவாத தாக்குதலால் கொதித்து போய் உள்ள இந்தியர்கள் பல்வேறு இடங்களிலும் போராடுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் 'கழுத்தை அறுத்துவிடுவேன்' என மிரட்டும் வகையில் சைகை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் கொதித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 பேர் பரிதாபமாக பலியாகினர். சுற்றுலாப் பயணிகளை கொடூரமாக சுட்டுக்கொலை செய்த படுபாதக செயலில் 3 பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்று இருந்தது. ஆனால் தற்போது அதனை மறுத்துள்ளது. எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தை யாரோ ஹேக் செய்து அதில் பதிவிட்டுள்ளதாக மறுத்து இருக்கிறது.
லண்டனில் இந்திய வம்சாவளியினர் போராட்டம்
முதலில் முகநூலில் பொறுப்பேற்பதாக அந்த இயக்கம் அறிவித்து இருந்தது. தற்போது தங்களுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் பொறுப்பு இல்லை என்று ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பகல்ஹாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.
அதேவேளையில், பாகிஸ்தானை கண்டித்து வெளிநாடுகளிலும் இந்திய வம்சாவளியினர் தங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு இது பெரும் தலைவலியை கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில், லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழுத்தை அறுத்துவிடுவேன் என சைகை
இந்திய வம்சாவளியினர்கள் மற்றும் யூத சமூகத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்ற பதாகைகளையும் தங்கள் கைகளில் வைத்து இருந்தனர். மேலும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், பாகிஸ்தான் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் இங்கிலாந்து அரசு ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை இதற்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது, பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ராணுவ அதிகாரி ஒருவர், போராட்டாக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அருகில் கையில் அபிநந்தன் புகைப்படம் இடம் பெற்று இருந்த பதாகையையும் பாகிஸ்தான் அதிகாரி வைத்து இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், பாகிஸ்தான் அதிகாரியின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கொந்தளிப்பு
பாகிஸ்தான் தூதரகத்தில் ராணுவம் மற்றும் ஏர் ஆலோசகராக இருக்கும் தைமுர் ராகத் என்பவர்தான் இப்படி மிரட்டும் தொனியில் நடந்து கொண்டது தெரியவந்தது. இவரது செயலை பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், "பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த ஊழியர் ஒருவர், லண்டனில் அமைதியாக போராடியவர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டுவதை பார்க்க முடிகிறது.
பாகிஸ்தானின் பயங்கரவாத மனப்பான்மை மீண்டும் வெளிப்பட்டுள்ளது" என்றார். போராட்டக்காரர்களும் இதனை கடுமையாக கண்டித்துள்ளனர். இது பற்றி போராட்டத்தை ஏற்பாடு செய்த ஒருவர் கூறுகையில், "இது அறியாமை இல்லை. ஆத்திரமூட்டும் செயல். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கண்டிக்கவில்லை என்றால் அவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்" என்று கூறினார்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, இடையூறு செய்யும் விதமாக வேண்டும் என்றே பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் இருந்து அதிக ஒலியுடன் இசை ஒலிபரப்பட்டதாகவும், இது காயப்பட்டவர்களை மேலும் இழிவுபடுத்தும் செயல் எனவும் கூறினர்.












Click it and Unblock the Notifications