ஒற்றை காலில் 10 நொடி நிற்பீர்களா? முடியாவிட்டால் உயிருக்கே ஆபத்தாம் - எச்சரிக்கும் ஆய்வு
லண்டன்: 10 நொடிக்கும் குறைவாக ஒற்றை காலில் நிற்க முடியாதவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 50 வயதுக்கும் குறைவான 1,702 பேரிடம் உடல்பயிற்சி மற்றும் உடல்நலம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்களை ஒற்றை காலில் நிற்க சொல்லி மற்றொரு காலை தரையில் படாமலும், இரு கைகளை இரு பக்கமும் முன்னோக்கி நேராக நிற்க வைத்து பரிசோதித்தனர்.

எவ்வளவு நேரம் அவர்கள் இதேபோல் நிற்கின்றனர் என கணக்கெடுக்கப்பட்டது. இந்த சோதனையில் 3 முறை அதேபோல் நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தோல்வியடைந்தவர்கள் வயது முதியவர்களாகவோ அல்லது மோசமான உடல்நிலை கொண்டவர்களாகவோ இருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த பரிசோதனையில் தோல்வியடைந்தவர்களில் 84% பேர் அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில், பின்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், ஆண்டுக்கு 6.80 லட்சம் பேர் கீழே விழுவதால் உயிரிழப்பதாக கூறுகின்றனர்.
குறிப்பாக இந்த சோதனையில் தேர்ச்சியடையவர்கள் உயிரிழந்தது 4.5% ஆகவும், தோல்வியடைந்தவர்களின் மரணம் 17.5% ஆகவும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த இந்த ஆய்வு அறிக்கையை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு மருத்துவ இதழ் வெளியிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications