ஒன்றல்ல.. இரண்டல்ல... 4000 கொரோனா வகைகள்... பகீர் கிளப்பும் பிரிட்டன் அமைச்சர்
லண்டன்: உலகெங்கும் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளதால், தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க அந்நிறுவனங்கள் தொடர்ந்து முயன்று வருவதாகப் பிரிட்டன் அமைச்சர் தெரிவித்துள்ளார்
உலகில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா, மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்ற செய்தியும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகத் தடுப்பூசி பலன் தராமல் போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்பூசி நிறுவனங்களும் தங்களின் தடுப்பூசி குறித்துத் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது,
4000 கொரோனா வகைகள்
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் தடுப்பூசி விநியோக அமைச்சர் நாதிம் ஜஹாவி சமீபத்தில் அளித்த பேட்டியில், "பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளைப் போலவே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வகைகள் உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள தடுப்பூசி இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகப் பலன் அளிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம்.
ஆய்வுகள் தீவிரம்
அதிலும் குறிப்பாக, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வகைகளுக்கு எதிராக தற்போது வரை தடுப்பூசிகள் பலன் அளித்தே வருகிறது. இருந்தாலும்கூட, நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வகைகள் உள்ளதால், அவை அனைத்திற்கும் எதிராகவும் செயல்படும் வகையில் தங்கள் தடுப்பூசிகளை நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. அனைத்து உருமாறிய கொரோனா வகைகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
உருமாறுவது ஏன்
எந்த ஒரு வைரசாக இருந்தாலும், தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கத் தன்னை தானே உருமாற்றிக்கொள்வது என்பது இயல்பான ஒன்று என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அனைத்து உருமாறிய கொரோனா வகைகளும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. சில வகை கொரோனா வைரஸ்கள் மட்டுமே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
கொரோனா பாதிப்பு
உலகெங்கும் தற்போது 10.48 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22.76 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,290 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா உயிரிழப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.