"தயங்கவே மாட்டோம்.." களத்தில் இறங்கிய ரிஷி சுனக் அதிரடி! ஹவுதிக்கள் எதிராக அதிகாலை வந்த பரபர உத்தரவு
லண்டன்: செங்கடல் பகுதியில் வரும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
செங்கடல் பகுதியில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துள்ளன. ஹவுதி படைகள் டிரோன் மூலம் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கே பகீர் சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்தே ஹவுதி இந்தத் தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறுகிறது. இஸ்ரேல் கப்பல்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதாக ஹவுதி சொல்கிறார்கள்.
பதிலடி: ஆனால், உண்மை அப்படி இல்லை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படகுகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகள் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து கண்டித்து வந்த போதிலும், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தே வந்தது.
இதற்கிடையே ஹவுதிக்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இன்று காலை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் ஏமனில் உள்ள ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க அதிபர்: இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்துள்ளார். இந்தத் தாக்குதல் முழுக்க முழுக்க எதிர்பாராத தாக்குதல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கடந்த சில வாரங்களாகவே செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களைக் குறிவைத்து ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச வணிக போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டே இருந்தது. இந்தச் சூழலில் தான் இன்று காலை தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பைடன் கூறுகையில், "இந்த தாக்குதல் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ஹவுதிக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இருக்கும்.. சர்வதேச வணிகக் கப்பல் மீது 27 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைக் கண்டு அஞ்சியே 2,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் செங்கடலைத் தவிர்க்கின்றன. இதனால் அவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களைத் திசைதிருப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது வணிகத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
எதற்காகத் தாக்குதல்: தங்கள் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச வர்த்தகத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
ரிஷி சுனக்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளார். ரிஷி சுனக் உத்தரவைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சர்வதேச நாடுகள் தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும் ஹவுதிகள் செங்கடலில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.. எனவே, அமெரிக்காவுடன் இணைந்து, தற்காப்புக்காக அவசியமான இந்த விகிதாச்சார நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று கூறியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கு அமெரிக்க இராணுவத்தின் முதல் பதிலை இந்தத் தாக்குதல்கள் குறிக்கின்றன. தாக்குதல்களை நிறுத்துமாறு அல்லது சாத்தியமான இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளுமாறு ஹவுதிகளுக்கு வெள்ளை மாளிகை மற்றும் பல கூட்டாளி நாடுகள் இறுதி எச்சரிக்கை விடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருங்கிணைந்த இராணுவத் தாக்குதல் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications