சிக்சர் அடிக்கப் போகும் ரிஷி சுனக்.. பிரிட்டனில் மிக விரைவில் சிகரெட்களுக்கு தடை! இது ஏன் முக்கியம்
லண்டன்: அடுத்த தலைமுறையினர் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் மிகவும் இக்கட்டான சூழலில் பிரதமராகப் பொறுப்பேற்றவர் ரிஷி சுனக். அப்போது அங்கே சில வார இடைவெளியில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்திருந்தனர். அந்நாட்டின் பொருளாதாரமும் மோசமாக இருந்தது.

அந்த நேரத்தில் தான் துணிச்சலாகப் பிரதமர் பதவியை ஏற்றார் ரிஷி சுனக். பிரிட்டனில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த நிலையில், அதைச் சரி செய்ய அவர் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மொத்தமாகத் தடை: இதற்கிடையே இப்போது அவர் மற்றொரு மெகா அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த தலைமுறையினர் சிகரெட் வாங்குவதையே முற்றிலுமாக தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து ரிஷி சுனக் யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரிஷி சுனக் இதில் மிகத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டில் வெளியாகும் பிரபல செய்தி நிறுவனமான தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து இதேபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்திருந்தது. அடுத்த தலைமுறை மக்கள் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் கடந்தாண்டு நியூசிலாந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2009 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த நபர்களுக்கு நியூசிலாந்தில் புகையிலை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற ஒரு தடை விதிப்பது குறித்தே ரிஷி சுனக் இப்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
பிளான் என்ன: இது குறித்த கேள்விக்குப் பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"2030ஆம் ஆண்டில் புகை பிடிக்கும் நபர்களே இல்லாத நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இவற்றை மனதில் வைத்தே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

சிகரெட் பழக்கத்தைக் கைவிட இலவச வேப் கிட்கள் வழங்குவது, கர்ப்பிணிப் பெண்கள் சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதை ஊக்குவிக்கும் வகையில் வவுச்சர் திட்டம் எனப் பல நடவடிக்கைகளை இப்போது பிரிட்டன் அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், சிகரெட்டிற்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
அடுத்தாண்டு தேர்தல்: அங்கே அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த மெகா அறிவிப்பை வெளியிட ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். சிகரெட் பழக்கத்தைத் தடுக்க பிரிட்டன் அரசு சமீப காலங்களில் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இ- சிகரெட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கு இலவச வேப் மாதிரிகளை வழங்க அனுமதிக்கும் சட்டத்தைக் கடந்த மே மாதம் தான் பிரிட்டன் அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அரசு நிர்வாகத்தினர், 2024 ஆம் ஆண்டிற்குள் ஒற்றை பயன்பாட்டு இ சிகரெட் விற்பனையைத் தடை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய இ சிகரெட் விலை குறைவு என்றாலும் அவை சுற்றுச்சூழலுக்கும் உடல்நிலைக்கும் மிகப் பெரிய கேடு விளைவிக்கும் என்பதால் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications