சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்.. இங்கிலாந்து தீர்ப்பாயம் பகீர்
லண்டன்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக இங்கிலாந்தின் சுயாதீனமான தீர்ப்பாயம் ஒன்று குற்றம்சாட்டி உள்ளது.
சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உய்குர் முஸ்லிம்களை சீனா ஒடுக்கி வருவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
ஜின்ஜியாங் மாகாண பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய சீனா அரசு சாதனங்களை பொருத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மறுகல்வி முகாம்கள் என்ற பெயரில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

இத்தகைய ஒடுக்குமுறைகளை சீனா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கை. மேலும் ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்; பெண்கள் கருவுற்றால் அவர்களை கருவிலேயே கொல்ல சீனா அரசு வலியுறுத்துகிறது என்பதும் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கிற புகார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய இங்கிலாந்தை சேர்ந்த சுயாதீனமான தீர்ப்பாயம், உய்குர் முஸ்லிம்களை சீனா இனப்படுகொலை செய்வதை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக அத்தீர்ப்பாயத்தின் தலைவர் Sir Geoffrey Nice QC கூறுகையில், உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு சீனா அரசாங்கம் செயல்படுகிறது. உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடையை சீனா அரசு அமல்படுத்தி உள்ளது. இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்பதில் தீர்ப்பாயம் உறுதியாக உள்ளது என்றார்.
இருப்பினும் இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பால் சீனாவை தண்டிக்க முடியாது. சீனா மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் முடியாது. Sir Geoffrey Nice QCதான் செர்பியாவின் முன்னாள் அதிபர் சுலோபாடன் மிலோசெவிக், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை செய்தார் என்பதை உறுதி செய்து வாதிட்டவர்.
இங்கிலாந்து தீர்ப்பாயத்தின் இக்குற்றச்சாட்டுகளை சீனா அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். சீனா உய்குர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதாக ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி இருக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் இங்கிலாந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
திஹேக்கை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில், சீனா மீதான இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மறுத்திருந்தது. இருப்பினும் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் இருந்தால்தான் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் எனவும் கூறி இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முடிவுகளை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் பெற்றதாக சீனா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications