போட்டோ - இ-மெயிலை ‛டெலிட்' பண்ணுங்க.. தண்ணீர் தட்டுப்பாட்டால் பிரிட்டன் விநோத உத்தரவு.. பின்னணி
லண்டன்: பிரிட்டனில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தண்ணீரை சேமிக்க பொதுமக்கள் தங்களின் பழைய இ - மெயில் மற்றும் போட்டோக்களை ‛டெலிட்' செய்யும்படி விநோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ-மெயில், போட்டோக்களை டெலிட் செய்வதன் மூலம் எப்படி தண்ணீரை சேமிக்க முடியும்? என்பதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 1967க்கு பின் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள், ஆறுகள், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பல ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன. பிரிட்டனில் மழை இன்றி வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகிறது. சில இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது.
வறட்சி ஏரியா
அதன்படி யார்க் ஷயர், கும்ப்ரியா, லங்காஷயர், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைட் மற்றும் செஷயர், கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் அனைத்தும் வறட்சி மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் வடகிழக்கு, லிங்கன்ஷயர், நார்தாம்ப்டன்ஷயர், கிழக்கு ஆங்கிலியா, தேம்ஸ், வெசெக்ஸ், சோலண்ட் மற்றும் தெற்கு டவுன்ஸ் உள்ளிட்ட பிற பகுதிகள் வறட்சியை எதிர்கொள்ளும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுரை
இந்நிலையில் தான் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செடிகளுக்கு தண்ணீரை குறைவாக பயன்படுத்த வேண்டும். காரை சுத்தம் செய்யவும் குறைவான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். பாத்திரம் கழுவும் தண்ணீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இ-மெயில் - போட்டோ டெலிட் செய்ய உத்தரவு
அதுமட்டுமின்றி இன்னொரு விநோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் இ - மெயிலில் உள்ள பழைய இ-மெயில் மற்றும் செல்போனில் உள்ள பழைய போட்டோக்களை பொதுமக்கள் ‛டெலிட்' செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய இ - மெயில், போட்டோக்களை டெலிட் செய்தால் தண்ணீரை எப்படி சேமிக்க முடியும்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு தரப்பினர் பிரிட்டன் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். பிரிட்டன் அரசின் விசித்திர உத்தரவுக்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது.
பின்னணி என்ன?
நம் டிஜிட்டல் வாழ்க்கையின் முதுகெலும்பாக டேட்டா சென்டர்கள் உள்ளன. இந்த டேட்டா சென்டர்களில் தான் இ-மெயில் உள்ளிட்டவற்றின் தரவுகள் சேமித்து வைக்கப்படும். பிரிட்டனில் டேட்டா சென்டர்கள் அதிகம் உள்ளன. அங்குள்ள சர்வர்கள் அதிகமாக சூடாவதை தடுக்க குளிரூட்டும் அமைப்புகள் உள்ளன. இந்த குளிரூட்டும் மையங்கள் கணிசமான அளவு நீரை பயன்படுத்துகின்றன. இதனால் நீர் தேவை அதிகரிக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி ஒரு மெகாவாட் டேட்டா சென்டரை குளிர்விக்க ஆண்டு ஒன்று 26 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சர்வரை குளிர்விக்க இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இ-மெயில், போட்டோக்களை அழிப்பதன் மூலம் சர்வரை குளிர்விக்க பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு கணிசமாக குறையும். இந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டன் அரசு நம்புகிறது. இதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications