"இந்து தர்மம்.." பிரதமரானது குறித்த கேள்விக்கு.. யோசிக்காமல் சட்டென ரிஷி சுனக் அளித்த அடடே பதில்
இந்து மதத்தைக் குறிப்பிட்டு ரிஷி சுனக் அளித்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எப்படி பிரதமர் பதவிக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இந்த பதவிக்குத் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை. மேலும், பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்த முதல் இந்து என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இது மட்டுமில்லாமல் பிரிட்டன் நாட்டின் இளம் வயது பிரதமர் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றுள்ளார். இவர் முதல்முறையாக எம்பியாக தேர்வான போதே, பகவத்கீதை மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
5 லட்சம் தொழிலாளர்கள்.. வேலை நிறுத்தத்தால் மூச்சு திணற உள்ள பிரிட்டன்! நெருக்கடியில் ரிஷி சுனக் அரசு
ரிஷி சுனக்
இப்போது பிரிட்டன் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அதைக் காக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.. அவர் பிரதமராகப் பதவியேற்று 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்குள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரிஷி சுனக் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் பிரதமர் பதவியேற்றது குறித்த கேள்விக்கு அவர் இந்து மதத்தைக் குறிப்பிட்டுத் தெளிவாகப் பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்து மதம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை இது கடமையைப் பற்றியது. இந்து மதத்தில் தர்மம் என்று ஒரு கருத்து உள்ளது.. அதை நாம் கடமை என்றும் கூடச் சொல்லலாம். சிறு வயது முதலே பெற்றோர் என்னை அப்படித்தான் வளர்த்தார்கள்.. நாம் என்ன செய்ய வேண்டுமோ.. அதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்வதுதான் அது.. இது உலகின் மிகக் கடுமையான வேலைகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் என்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதாலேயே இதற்கு ஒப்புக் கொண்டேன்.
மாற்றத்தைத் தருவேன்
அந்த நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த நபர் நானாக இருப்பேன் என்று உணர்ந்தேன்.. பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வந்தார்கள். இதை உணர்ந்தே பிரச்சினைகளைச் சரி செய்ய என்னால் முடிந்ததைச் செய்ய முன்வந்தேன்" என்று அவர் தெரிவித்தார். ரிஷி சுனக் கடந்த காலங்களிலும் தனது இந்து மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாகவே பேசியுள்ளார். அங்குள்ள இஸ்காம் கோயிலுக்கும் கூட அடிக்கடி செல்வதை ரிஷி சுனக் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல் மனைவி குறித்து நெகிழ்ச்சி
தொடர்ந்து தனது மனைவிக்குக் கல்லூரி காலத்தில் எப்படி ப்ரபோஸ் செய்தார் என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். தனது மனைவி அளித்த ஆதரவு காரணமாகவே தன்னால் இந்த இடத்தை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். பெரும் பணக்காரரான அவருக்கு ஏழை மக்களின் பிரச்சினைகள் புரியாது என்று எழுந்துள்ள விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், "என்னை கோடீஸ்வரர் என்று குறிப்பிட வேண்டும். செல்வத்தில் அதிர்ஷ்டத்தைப் பெற்றேன் என்று வேண்டுமென்றால் என்னைக் குறிப்பிடலாம்.
தியாகம்
நான் வளர்க்கப்பட்ட சூழலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வந்த பெற்றோரால் நான் வளர்க்கப்பட்டேன்.. முடிந்தவரைக் கடினமாக உழைத்து, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் சிந்தனையாக இருந்தது. நாங்கள் பிரிட்டிஷ் வாழ்க்கையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன்.. கடினமாக உழைக்கவும், சரியானதைச் செய்யவும், மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியே என்னை வளர்த்தார்கள்.
விலைவாசி உயர்வு
இப்போது நாட்டின் நிதிநிலை மோசமாக உள்ளது. விலைவாசி உச்சத்தில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வோர் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மிகப் பெரியளவில் ஊதிய உயர்வைத் தர நான் 100% தயாராகவே உள்ளேன். இருப்பினும், அப்படிச் செய்தால் அது மேலும் விலைவாசி உயரவே காரணமாக இருக்கும். நாட்டில் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். நிலைமை சரியான பிறகு அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும்" என்றார்.
பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் நாட்டின் முதல் பிரதமர் பதவிக்கு வந்த முதல் இந்துவான ரிஷி சுனக்கிற்கு மதுக் குடிக்கும் பழக்கமும் இல்லை.. புகைப்பிடிக்கும் பழக்கமும் இல்லையாம். நீங்கள் ரொம்ப அறிவாளி என்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "சீக்கிரம் எழுந்து, அனைத்து விஷயங்களில் கவனம் செலுத்தி, பிரச்சனைகளைத் தீர்க்க முடிந்த வரை அனைத்தையும் செய்வது தான் இதற்கு அர்த்தம் என்றால்.. ஆம், அது நான்தான்.. மேலும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு அப்படித்தான் இருந்தாக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.