ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. அடையாளம் இழந்து மொத்தமாக விடை பெறும் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ
லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தம்பியும் இளவரசர்களில் ஒருவருமாகிய ஆண்ட்ரூவை வின்ட்சர் எஸ்டேட்டில் உள்ள அவரது வசிப்பிடமான 'ராயல் லாட்ஜ்'ஐ காலி செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் இளவரசர் ஆண்ட்ரூ நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்ததது. இதையடுத்து அரச குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றும் நோக்கில் மன்னர் சார்லஸ் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அப்போது பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் இளவரசர் ஆண்ட்ரூ மீது எடுக்கப்படவில்லை. அதேநேரம் கடந்த 2022 ம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வெளியே ஒப்பந்தம் மூலம் வழக்கை முடித்துக் கொண்டார்.

இதனிடையே பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா பெண் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய நினைவு குறிப்பில் ஆண்ட்ரூ தன்னுடன் பாலுறவு கொள்வது தனது பிறப்புரிமை என்று நம்பியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 2011 ஆம் ஆண்டின் ஆண்ட்ரூவுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையேயான கடிதம் அவர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும்" என்று ஆண்ட்ரூ கூறியதை வெளிப்படுத்தின. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூ, 'அரச பட்டங்களை துறக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, பொது வாழ்க்கையில் இருந்து விலகவும் முடிவு செய்து உள்ளேன், என்றார்.
இந்நிலையில் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடங்கி உள்ளார். இது நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு அரச குடும்ப உறுப்பினருக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பட்டங்கள் நீக்கம்: இளவரசர் ஆண்ட்ரூவின் 'இளவரசர்' என்ற பட்டத்தை நீக்குவதற்கு முறையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவருக்கு இனிமேல் 'ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சர்' என்றே பெயர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், அவர் 'டூக் ஆஃப் யார்க்' என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.
விண்ட்சர் எஸ்டேட்டில் உள்ள அவரது நீண்டகால வசிப்பிடமான ராயல் லாட்ஜ் மாளிகையை ஒப்படைக்குமாறு ஆண்ட்ரூவுக்கு முறையான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 30 அறைகள் கொண்ட இந்த மாளிகையில் இருந்து ஆண்ட்ரூ வெளியேறி, கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள தனிப்பட்ட குடியிருப்பிற்குச் செல்ல வேண்டும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த மாளிகைக்கு அவர் வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இப்போது அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்படுவது முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், மிகவும் தீவிரமான தவறான முடிவுகளை ஆண்ட்ரூ எடுத்தது தெளிவாகிறது என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவை மன்னர் சார்லஸ் எடுத்தாலும், அவருக்கு பட்டத்து இளவரசர் வில்லியம் உட்பட அரச குடும்பத்தினர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறியுள்ள அரண்மனை, "எல்லா வகையான துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுடன் தங்களது எண்ணங்களும் ஆழ்ந்த அனுதாபங்களும் இருந்தும், எப்போதும் இருக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளது. இளைய தலைமுறையினர் மத்தியில் ஆதரவை இழந்து வரும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் பெயரை காப்பாற்ற மன்னர் சார்லஸ் எடுத்த ஒரு முக்கியமான வியூகமாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications