அடடே! ரிஷி சுனக்கிற்கு வந்த "மெகா" பிரச்சினை.. போரிஸ் ஜான்சன் சொன்ன அந்த வார்த்தை நோட் பண்ணீங்களா
லண்டன்: பிரிட்டன் பிரதமராக இப்போது ரிஷி சுனக் இருந்து வருகிறார். இதற்கிடையே முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இப்போது ரிஷி சுனக் மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் இப்போது அதிபராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக். பிரிட்டன் நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை. மேலும், இளம் வயது பிரதமர், முதல் இந்து பிரதமர் என பல சிறப்புகளையும் அவர் கொண்டிருந்தார்.
கடந்தாண்டு வெறும் சில மாதங்களில் அடுத்தடுத்து அங்கே பிரதமர்கள் பதவி விலகிய நிலையில், இக்கட்டான சூழலில் அவர் பிரதமர் பதவிக்கு வந்தார். இதற்கிடையே இப்போது அவரே சிக்கலில் மாட்டியுள்ளார்.

போரிஸ் ஜான்சன்: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்பியாகவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பார்ட்டி வைத்த குற்றச்சாட்டில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனிடையே அவர் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் நாடாளுமன்ற குழு, அரசியல் ரீதியாகத் தன்னை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாகச் சாடியுள்ளார். இதற்கு நாடாளுமன்ற குழு உடனடியாக எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. ஏற்கனவே கடந்தாண்டு அவர் தான் அரசியலில் சந்தித்த பின்னடைவுக்கு ரிஷி சுனக்கே காரணம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரபர குற்றச்சாட்டு: இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறுகையில், "கமிட்டியின் அறிக்கை துல்லியமல்லாமல் முன்முடிவுடன் அணுகப்பட்டதை போலவே இருக்கிறது. இங்கே இருக்கும் வெகு சிலர் இணைந்து என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார். இதுவரை போரிஸ் மீதான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை குறித்த தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜான்சனின் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தான் ரிஷி சுனக் கருவூல அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது முதலே இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவியது. ரிஷி சுனக்கின் ராஜினாமா தான், ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக அழுத்தத்தை அதிகரித்தது. மேலும், ரிஷி சுனக் பிரதமராக வாய்ப்பு உருவான போது, போரிஸ் நேரடியாகவே அவரை சென்று சந்தித்தது பிரதமர் பதவிக்குப் போட்டியிட வேண்டாம் எனக் கூறினார்.
மோதல்: மேலும், யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும் ஓகே.. ஆனால் ரிஷி சுனக் மட்டும் வேண்டாம் என போரிஸ் ஜான்சன் தனது கட்சியினரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இப்படி கடந்தாண்டு முதலே இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கை இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி, இப்போது அங்கே கருத்துக்கணிப்புகளில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அங்கே பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இது குறித்தும் போரிஸ் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் போது கருத்துக்கணிப்புகளில் ஒரு சில புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்ததாகவும் இருப்பினும் இப்போது இடைவெளி அதிகரித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். மக்களிடையே மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கே விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வெல்வது கடினம்.. இதில் பெரிய வாக்கு வித்தாயசத்தில் தோற்றால் அது ரிஷி சுனக் செல்வாக்கைக் குறைப்பதாக அமைந்துவிடும்.












Click it and Unblock the Notifications