சிக்கல்! ரிஷி சுனக் போட்ட பெரிய யூடர்ன்.. கேப்பில் நுழைய பார்க்கும் போரிஸ் ஜான்சன்! யாருக்கு வெற்றி
லண்டன்: ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகக் கடந்த வாரம் பதவியேற்ற நிலையில், அவருக்கான அழுத்தம் என்பது உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிகரித்து இருக்கிறது.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறை.
இப்போது பிரிட்டன் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அதை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால் தொடக்கம் முதலே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பிரிட்டன் பொருளாதாரம்
இருந்த போதிலும் பிரிட்டன் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வரக் குறைந்தது சில மாதங்களாவது ஆகும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனா பாதிப்பிற்குப் பின் உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாகப் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அதிலும் பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் எரிபொருள் கிடைப்பதிலும் கூட சிக்கல் ஏற்பட்டு இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.

யூ டர்ன்
மிகவும் உறுதியான தலைவராக ரிஷி சுனக் அறியப்பட்ட நிலையில், அவர் முதல்முறையாகத் தனது முடிவில் இருந்து பின்வாங்கி யூடர்ன் போட்டு உள்ளார். பருவநிலை மாற்றம் என்பது இப்போது முக்கிய பிரச்சினையாக எழுந்து உள்ளது. இதைத் தடுக்க உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகிறது. இருப்பினும், இன்னும் கூட பல வலதுசாரி தலைவர்கள் பருவநிலை மாற்றத்தை முக்கிய பிரச்சினையாக அங்கீகரிக்க மறுக்கின்றனர்.

ஐநா பருவநிலை மாநாடு
ஐநா பருவநிலை மாநாடு எகிப்தில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. முதலில் இந்த மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்தார். பிரதமர் பதவிக் காலம் முடியும் வரையும் கூட பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தார். உள்நாட்டில் இருக்கும் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டி உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதாவது பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் எடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பங்கேற்காது என்பதாக இது அமைந்தது.

எதிர்ப்பு
இதற்குச் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் இந்த விவகாரத்தில் இப்போது யூடர்ன் போட்டு உள்ளார். தான் ஐநா காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார். இது குறித்து ரிஷி சுனக் தனது ட்விட்டரில், "காலநிலை மாற்றத்தில் நடவடிக்கை இல்லாமல் நீண்ட மாற்றம் ஏற்படாது. புதுப்பிக்கதக்க ஆற்றல் தான் இதற்கான தீர்வு. இதன் காரணமாகவே நான் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் முக்கியம்
வலதுசாரி கன்சர்வேடிவ் கட்சியில் சில தலைவர்கள் எப்போதும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஆர்வம் காட்டியதில்லை. முந்தைய பிரதமரான லிஸ் டிரஸ் இதில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை பிரிட்டன் மன்னராக உள்ள சார்லஸ் எப்போதும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க போராட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்தச் சூழலில் ரிஷி சுனக் மனம் மாறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

போரிஸ் ஜான்சன்
அதேநேரம் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த போது அவர் நெட் ஜீரோ கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்தார். இந்த பருவநிலை மாற்ற மாநாட்டிற்குப் போகவுள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்து இருந்தார். இது ரிஷி சுனக்கின் தலைமைப் பண்பு குறித்து கேள்வியை ஏற்படுத்தலாம். மேலும், ரிஷியைத் தாண்டி தான் இன்னும் சர்வதேச தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்க போரிஸ் ஜான்சன் முயல்கிறார். இதைச் சமாளிக்கவே ரிஷி சுனக் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியுள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications