திடீர் திடீரென சைரன் சத்தத்துடன் அலறும் மொபைல்! அதுவும் சொல்லி வச்ச மாதிரி எல்லாருக்கும்! என்னாச்சு
ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்துமே மொபைல் வசமாகிவிட்டது.
லண்டன்: இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன்களை நம்மால் தவிர்க்க முடியாது. இதனிடையே பிரிட்டனில் திடீர் திடீரென மொபைல்கள் அலறப் போகிறது. அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மொபைல், உடைகள், டிவி, பிரிட்ஜ் அவ்வளவு ஏன் வாகனங்களைக் கூட இப்போது நொடிகளில் ஆன்லைன் தளங்களில் வாங்க முடிகிறது.
அதேபோல வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மேட்ரிமோனி தளங்கள் காதலிக்க டேட்டிங் தளங்களும் கூட வந்துவிட்டன. அந்தளவுக்கு இப்போது எல்லாமே டிஜிட்டல் வசமாகிவிட்டது.

டிஜிட்டல் யுகம்
குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல்களின் தேவை ரொம்பவே அதிகரித்துவிட்டது. மொபைல் இல்லையென்றால் ஒருவரால் பல வேலைகளைச் செய்யவே முடியாது என்றாகிவிட்டது. அந்தளவுக்கு நமது ஆறாவது விரலைப் போல மொபைல் மாறிவிட்டது. இது சில நேரங்களில் கெட்ட பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, இதனால் ஏற்படும் நன்மைகளும் ரொம்பவே அதிகம். நாம் ஆபத்தான இடங்களில் சிக்கியிருந்தால் நம்மைக் காப்பதில் அலைப்பேசிகளை முக்கியமானதாக உள்ளது. பல கடத்தல் வழக்குகள் மொபைலால் கண்டுபிடித்துத் தீர்க்கப்பட்டுள்ளது.

திடீரென வரும் சைரன் ஒலி
இதனிடையே பிரிட்டன் அரசு இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதாவது மிக மோசமான வானிலை நிகழ்வுகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படும் போது, அது தொடர்பாக மக்களுக்கு மொபைல் மூலம் எச்சரிக்கை விடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அப்படி எச்சரிக்கை மணி வரும்போது, மொபைலில் இருந்து சைரன் போன்ற ஒலி வரும். திடீரென சைரன் எச்சரிக்கை வருவதால் நிச்சயம் அதைப் புறந்தள்ளாமல் கவனிப்பார்கள். இதன் மூலம் தக்க நேரத்தில் அவர்களால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

சோதனை
இது தொடர்பாக அடுத்த மாதம் சோதனை நடத்தவும் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்த டெஸ்டிங் மெசேஞ் அந்நாட்டு மக்களுக்கு அனுப்பப்படும். இந்த புதிய எச்சரிக்கை அலர்ட் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும் என்றும், உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும் இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அலர்ட் அனுப்பப்படும். உச்சபட்ச பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள காலத்தில் மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்பதால் அடுத்துப் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட மக்களுக்கு இந்த சைரன் அலர்ட் போகாமலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எதற்குப் பயன்படும்
தற்போது வானிலை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகள் குறித்து மட்டுமே அலர்ட் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இருப்பினும், வரும் காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கான அலர்ட்டும் இதில் சேர்க்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளம் முதல் காட்டுத்தீ வரை பலவிதமான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்த புதிய அவசரக்கால எச்சரிக்கை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் அமைச்சர் ஆலிவர் டவுடன் கூறினார். இதன் மூலம் உடனடியாக ஆபத்து ஏற்படும் இடத்தில் உள்ளவர்களுக்குத் தக்க நேரத்தில் எச்சரிக்கை மெசேஞ் அனுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்னல் வேகம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இது அவசரக் காலங்களில் நாம் செயல்படும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் 90% மக்களுக்கு மின்னல் வேகத்தில் மெசேஞ் அனுப்பப்படும். இது சோதனைக்குப் பிறகு நாடு முழுக்க அமல்படுத்தப்படும். அரசு அல்லது அவசரக்கால அமைப்புகளிடம் இருந்து மட்டுமே இந்த மெசேஞ்கள் வரும். எங்கே பாதிப்பு, என்ன செய்ய வேண்டும், கூடுதல் தகவல்களை எங்கே தெரிந்து கொள்ளலாம் என்று அனைத்து தகவல்களும் அந்த மெசேஞ்சில் விரிவாக விளக்கப்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகள்
அதேநேரம் இதுபோன்ற செயல்முறைகளை முதலில் அமல்படுத்தும் நாடு பிரிட்டன் இல்லை. ஏற்கனவே, இதுபோன்ற எச்சரிக்கை முறை அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அங்கு வானிலை உள்ளிட்ட நேரங்களில் இது பல உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. இது அருகே இருக்கும் மொபைல் கோபுரங்கள் மூலம் அனுப்பப்படும். அதேநேரம் இதில் யாருடைய மொபைல்களுக்கு மெசேஞ் செல்கிறது, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது என்றும் அரசு மட்டுமே இந்த சைரன் அலர்ட் மெசேஞ்களை அனுப்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எங்கே வரும்
இந்த சைரன் எச்சரிக்கை அலர்ட் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் பயன்படுத்தப்படும்.., தொடக்கக் காலத்தில் வெள்ளம் உட்பட மிகவும் கடுமையான வானிலை தொடர்பான சம்பவங்களுக்கு எச்சரிக்கை தர மட்டுமே இது பயன்படும். இதுபோல எச்சரிக்கை அனுப்ப அவசரக்கால சேவைகள், போக்குவரத்துக் குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஏஜென்சிக்கள் என்று பல்வேறு பிரிவுகளுடன் பிரிட்டன் அரசு கை கோர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications