அறிவியல் அற்புதம்! 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த கணவர்! உறைய வைத்த விந்தணு மூலம் குழந்தை பெற்ற மனைவி
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவர் இறந்து இரு ஆண்டுகளுக்குப் பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
உலகெங்கும் அறிவியல் வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இது மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதனால் உலகமும் மின்னல் வேகத்தில் மாறிக் கொண்டு இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகம் இப்போது இல்லை.
அறிவியல் அற்புதம்
அப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத பல விஷயங்களை இப்போது அசல்டாக செய்ய முடிகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பெம் ஒருவர், தனது கணவர் இறந்த இரு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட அவரது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதற்காக அவர் மருத்துவருக்கும் அறிவியலுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். அது எப்படி நடந்தது? வாங்கப் பார்க்கலாம்.
இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரைச் சேர்ந்தவர் லாரன் மெக்ரிகோர். 33 வயதான இவர் கிறிஸ் என்பவரைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே வாழ்க்கை அட்டகாசமாகச் சென்று கொண்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் கிறிசுக்கு மூளையில் கட்டி இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இல்லாமல் அவர் கடந்த 2020 ஜூலை மாதம் உயிரிழந்தார்.
தம்பதி
லாரன் மெக்ரிகோர்- கிறிஸ் தம்பதி இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக கிறிஸ் உயிரிழந்தது லாரனுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இருப்பினும், அறிவியல் உதவியுடன் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் லாரன் குழந்தை பெற்றுள்ளார். அது எப்படி எனக் கேட்கிறீர்களா! கிறிஸ் உயிருடன் இருந்த சமயத்தில், மருத்துவமனையில் அவரது விந்தணுவை உறைய வைத்துள்ளனர்.
கருத்தரிப்பு
அவர் உயிரிழந்த நிலையில், சுமார் 9 மாதங்கள் கழித்து ஐவிஎஃப் முறையில் கருத்தரித்து உள்ளார். அவருக்குக் கடந்த மே 17ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இது குறித்து லாரன் கூறுகையில், "குழந்தையிடம் அப்பாவைப் புகைப்படம் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கிறிஸ் உயிரிழக்கும் போதும், எனக்காக இவனை விட்டுச் சென்றுள்ளான்" என்கிறார் நெகிழ்ச்சி உடன்.
மகத்தான பரிசு
மேலும், தனது குழந்தைக்குத் தலைமுடி, முகம் எல்லாம் அப்பாவைப் போலவே இருப்பதாகவும் பூரிக்கிறார். தொடர்ந்து அவர் கூறுகையில், "கிறிஸ் எனக்குக் கொடுத்து மகத்தான பரிசு தான் இந்த குழந்தை. கிறிஸ் என்னுடன் இல்லாமல் போனாலும், இவன் இருக்கிறான்.. இதன் மூலம் கிறிஸ் தனது ஒரு பகுதியை எனக்காக விட்டுச் சென்று போலவே நான் உணர்கிறேன்" என்று கலங்குகிறார்.
அறிவியல்
லாரன் மெக்ரிகோர் தனது குழந்தைக்கு செப் எனப் பெயரிட்டுள்ளார். லாரன் மெக்ரிகோர் கிறிஸ் உடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி உள்ளார். விதி அவர்கள் இருவரையும் நிரந்தரமாகப் பிரித்துவிட்டாலும், அறிவியல் அவர்களின் ஆசையை இப்போது நிறைவேற்றி உள்ளது.