நான்கே ஆண்டுகள்.. 1 லட்சம் கிராமங்களுக்கு மின்சார வசதி.. அதிரடி பாய்ச்சலில் உ.பி. அரசு
உத்தரபிரதேசத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே உபி அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த நான்கே ஆண்டுகளில் 1 லட்சத்து 21 ஆயிரம் கிராமங்களுக்கு முழுமையான மின்சார வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் நடவடிக்கைகள், இந்தியாவையே திரும்பிப் பார்க்க செய்து வருகின்றன. குறிப்பாக, உபியில் மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களும், கல்வி மேம்பாட்டு திட்டங்களும் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் யோகி ஆதித்நயநாத் உறுதியளித்ததை செய்து காட்டும் வகையில் மாநில அரசு முழுவீச்சில் இயங்கி வருகிறது.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே உபி அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் ரூ. 55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏராளமான மெட்ரோ ரயில் திட்டங்களும், புதிய சாலை திட்டங்களும் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, உத்தரபிரதேசம் முழுவதும் மின்சார வசதியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் உபியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 324 கிராமங்கள் முழுமையான மின்சார வசதியை பெற்றிருக்கின்றன. இதனை அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே. சர்மா, சட்டமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ள 36,990 கிராமங்களுக்கு முழுமையான மின்சார வசதி செய்து தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
கிராமங்களை மின்மயமாக்கும் நடவடிக்கைகள் எந்தவித தொய்வும் இன்றி தினமும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், மின்சார வசதி கிடைக்கப்பெற்ற கிராமங்களில் தொழிற்சாலைகளை நிறுவவும், அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications