கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
லக்னோ: கிராப் வெட்டி, ஆண்களைபோல டிரஸ் போட்டுகொண்டு, கையில் கத்தரிகோலுடன் நிற்கிறார்கள் இரு இளம்பெண்கள்!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ் நாராயணன். இவர் ஒரு பார்பர். சொந்தமாக ஒரு சலூன் கடை நடத்திதான் குடும்பத்தை கவனித்து வந்தார்.
ஜோதி குமாரி என்ற 18 வயது மகளும், நேகா என்ற 16 வயது மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு ஸ்கூலில் படித்து வருகிறார்கள். ஒருநாள் துருவ்வுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. 2014-ல் நிலைமை இன்னும் மோசமாகி படுத்த படுக்கையாகிவிட்டார்.

சலூன் நடத்த முடிவு
இதனால் குடும்பம் வறுமையில் சிக்கியது. சொத்துக்கள், நகைகள், வீடு, வாசல் என எதையுமே துருவ் சேர்த்து வைக்கவில்லை. ஒருபக்கம் அவரது உடல்நிலை, மற்றொரு பக்கம் அன்றாட செலவுகள் என குடும்பம் தத்தளித்தது. இதனால் அவரது மகள்கள் 2 பேரும் அப்பா நடத்தி வந்த சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தார்கள்.

தவறாக நடக்க முயற்சி
ஆனால் அதிலேயும் ஒரு பிரச்சனை வந்தது. 2 பேருமே இளம் பெண்கள் என்பதால், ஆண்கள் யாருமே கடைக்கு வரவில்லை. அப்படியும் கடைக்கு வந்த சிலர் பெண்களிடம் தப்பாக நடக்க முயற்சி செய்தார்கள். இருக்கும் பிரச்சனையில் இந்த பிரச்சனைகளையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

பெயர்கள் மாற்றம்
அதனால் ஆண்களை போல கிராப் வெட்டிக் கொண்டார்கள். கையில் காப்பு போட்டு கொண்டனர். பேன்ட்-டீஷர்ட் என மாறினார்கள். தங்கள் பெயரைக்கூட தீபக், ராஜூ என்று மாற்றி கொண்டார்கள். சொந்த கிராமத்தை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இவர்களை பற்றின முழு விவரம் தெரியாததால் கடைக்கு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.

ஸ்கூல் போகிறார்
இரு பெண்களும் வருபவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கி தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். அதாவது காலையில் ஸ்கூல் போய்வந்து, மதியம் கடையை திறப்பார்கள். இப்படியே பெரிய பெண் ஜோதிகுமாரி ஸ்கூல் முடித்து காலேஜுக்கு போய்விட்டார். தலைமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.

கஷ்டமா இருந்தது
ஆனால் நேகா இன்னும் படித்து வருகிறார். இவர் படு ஸ்மார்ட். "ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இப்போது நாங்க யாருக்கும், எதுக்கும் பயப்படுவதில்லை. நாள் ஆக ஆக எங்கள் நிலைமையை கஸ்டமர்களிடம் சொன்னோம், அவர்களும் எங்களை இப்போது புரிந்து கொண்டார்கள்" என்கிறார்.

துணிச்சல்
இவர்களை பற்றின செய்தி உள்ளுர் நாளேடுகளில் வந்ததை பார்த்த அரசு அதிகாரிகள், இப்பெண்களை நேரில் வரவழைத்து துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications