ஹாஸ்பிடல் அலட்சியத்தால் மகன் உயிரிழப்பு.. 30 நாளாகியும் யோகி ஆக்ஷன் எடுக்கவில்லை - பா.ஜ.க எம்.எல்.ஏ
லக்னோ: தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அலட்சியம் காரணமாக தனது மகன் உயிரிழந்து விட்டதாகவும், இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்து 30 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் சண்டிலா தொகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ராஜ்குமார் அகர்வால்.
மகன் உயிரிழப்பு
இவரது மகன் ஆஷிஷ்(35). கொரோனா தொற்று உறுதியானதால் இவர் ககோரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி ஆஷிஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே தனது மகன் இறப்புக்கு காரணம் என்று ராஜ்குமார் அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
யோகி நடவடிக்கை எடுக்கவில்லை
இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத், போலீசாரிடம் புகார் அளித்து 30 நாட்களை கடந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ராஜ்குமார் அகர்வால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- ஏப்ரல் 26-ம் தேதி அன்று காலை எனது மகன் ஆஷிஷ் ஆக்ஸிஜன் அளவு 94 ஆக இருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், எங்களுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.
மருத்துவர்கள் அலட்சியம்
அன்று மாலை திடீரென டாக்டர்கள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாகக் கூறினர். நாங்கள் வெளியிடத்தில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தோம், ஆனால் இந்த ஆக்ஸிஜனை எனது மகனை அடைய மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகதான் எனது மகன் இறந்து விட்டார்.
மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
ஏப்ரல் 26-ம் தேதி மட்டும் அந்த மருத்துவமனையில் 7 பேர் இறந்தனர். இது குறித்து நான் முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தேன். இந்த சம்பவம் நடந்து 30 நாட்களை கடந்த பின்னரும் இன்னும் எனது புகார் பதிவு செய்யப்படவில்லை. எனது கோரிக்கை என்னவென்றால், இந்த மரணங்கள் குறித்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். எனது மகன் மரணத்துக்கு காரணமான மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்குமார் அகர்வால் தெரிவித்தார்.