கிழக்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்வு! 63 இந்து குடும்பங்களுக்கு வீடு, நிலம் வழங்கிய யோகி
லக்னோ: கிழக்கு பாகிஸ்தானில்(வங்கதேசம்) இருந்து இடம்பெயர்ந்த 63 இந்து குடும்பங்களுக்கு சுமார் 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு உத்தர பிரதேச அரசு வீடு, விவசாய நிலங்களை வழங்கியது.
தற்போதைய வங்கதேசம் இதற்கு முன்பு கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. அங்கிருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தனர்.
இதையடுத்து வாழ்வாதாரம் இழந்த இந்து குடும்பங்கள் உத்தர பிரதேசத்துக்கு வந்தனர். இவ்வாறு வந்த 63 இந்து குடும்பங்களுக்கு தற்போது உத்தர பிரதேச மாநில அரசு உதவி செய்துள்ளது.

63 குடும்பங்களுக்கு வீடு
அதாவது கான்பூர் தேஹாத் மாவட்டம் ரசூலாபாத் பகுதியில் 63 குடும்பங்களுக்கு வீடு, தலா 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று நடந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், 63 குடும்பங்களுக்கும் வீடு, விவசாய நிலங்களை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

வாழ்வாதார அவசியம்
இந்த குடும்பங்களின் இத்தகைய அவலத்துக்கு முந்தைய அரசுகளே காரணம். இந்த குடும்பங்கள் அனைத்தும் 1970களில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இருந்து இந்தியா வந்தனர். இவர்கள் மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் நகரில் நூல் ஆலையில் வேலை செய்தனர். 1984ல் நூல் ஆலை மூடப்பட்டது. இவர்களுக்கு இருப்பிடம், வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

400 பேர் பயன்
இதை தற்போது செய்துள்ளோம். அதன்படி வீட்டு மனை, 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கியுள்ளோம். முதல்வர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்குகிறோம். இதன்மூலம் சுமார் 40 ஆண்டு காத்திருப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டது. இதன்மூலம் 63 குடும்பங்களில் 400 பேர் பயன் பெறுகின்றனர். ஏழைகளைப் பற்றி பேசுபவர்களுக்கு அவர்களின் துன்பங்கள் குறித்த கவலை ஏன் சென்றடையவில்லை.

தேடி கண்டுபிடித்து நடவடிக்கை
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதையடுத்து அவ்வாறு உள்ளவர்களை உத்தர பிரதேச அரசு கண்டுபிடித்து அவர்களுக்கான வசதியை செய்து கொடுத்து வருகிறோம்.












Click it and Unblock the Notifications