பிளேடு, பேட்டரி, ஸ்க்ரூ.. சிறுவனின் வயிற்றுக்குள் 65 பொருட்கள்.. ஆபரேஷனுக்குப் பிறகு நேர்ந்த கொடூரம்
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் 14 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து ரேசர் பிளேடு, ஸ்க்ரூ, பேட்டரி என 65 பொருட்களை மருத்துவர்கள் நீக்கிய நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரேதேச மாநிலம், ஹத்ராஸைச் சேர்ந்தவர் ஆதித்யா சர்மா. 14 வயது சிறுவனான ஆதித்யா சர்மா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனைில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, சிறுவனின் வயிற்றைப் பரிசோதித்தபோது பிளேடு, ஸ்க்ரூ, பேட்டரி என 65 மெட்டல் பொருட்கள் இருப்பதும், நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மருத்துவர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து 65 பொருள்களையும் சிறுவனின் வயிற்றில் இருந்து அகற்றிய நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவன் கடந்த காலங்களில் இந்தப் பொருள்களை எல்லாம் விழுங்கியிருக்கலாம். அதனால், நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
ஆதித்ய சர்மாவின் தந்தை சான்செட் சர்மா கூறுகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் ஆதித்யா சர்மா மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது என்று கூறி வந்தார். இதையடுத்து, ஆக்ராவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், மகனுடைய பிரச்னை சரியாகவில்லை. இதைத்தொடர்ந்து, ஜெய்ப்பூர், அலிகர், நொய்டா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றோம்.
ஆனால், அக்டோபர் 28 ஆம் தேதி எனது மகன் உயிரிழந்துவிட்டார். இதெல்லாம் ஒரே மாதத்துக்குள் நடந்து முடிந்துவிட்டது. ஆதித்யாவுக்கு இதுவரை எந்தவொரு உடல்நலப் பிரச்னையோ, மனநலப் பிரச்னையோ இருந்ததில்லை. அவர் எங்களுக்கு ஒரே மகன். ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தனர்.
அந்தப் பரிசோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆதித்யாவுக்கு மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அலிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது, சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது நாசல் பிளாக்கேஜ் எனும் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
அதனை மருத்துவர்கள் உடனடியாக சரிசெய்தனர். அதன் பிறகு அக்டோபர் 26 ஆம் தேதி ஆதித்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்தபோது 19 பொருட்கள் வயிற்றுக்குள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
உடனடியாக நொய்டா மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது 42 பொருட்கள் சிறுவனின் வயிற்றுக்குள் இருப்பதாகவும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, டெல்லி சப்தார்ஜங்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது 65 பொருள்கள் சிறுவனின் வயிற்றில் இருப்பது தெரியவந்தது.
மேலும், ஆதித்யாவின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 280 ஆக அதிகரித்திருந்தது. மருத்துவர்கள் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த 65 பொருட்களை அகற்றிய நிலையில் ஆதித்யா உயிரிழந்துவிட்டார் என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications