ஹரித்வார் வன்முறை பேச்சு பற்றி கேள்வி கேட்டா உ.பி. துணை முதல்வர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
லக்னோ: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சாமியார்கள் ஒன்று கூடி வன்முறையை தூண்டும் வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதால் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியை உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சட்டென நிறுத்தியது சர்ச்சையாகி உள்ளது.
ஹரித்துவாரில் சாமியார்களின் சங்கமம் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சாமியார்கள் பலரும் பகிரங்கமாக வன்முறையை தூண்டும் வகையில் பேசினர்.

இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும்; இனச்சுத்திகரிப்பு செய்தாக வேண்டும் எனவும் பேசினர். ஹரித்வாரில் சாமியார்கள் இப்படி வன்முறைத்தனமாக பேசிய பேச்சுகள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பேச்சுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா பிபிசி இந்தி சேவைக்கு வீடியோ பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஹரித்வார் சாமியார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கேசவ் மவுரியா கூறியதாவது: நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் மதத்தலைவர்கள் தங்களது கருத்துகளை பகிரங்கமாக பேசுவதற்கு உரிமை இருக்கிறது. இந்து சாமியார்கள் பேசுவதை கேள்வி கேட்கும் நீங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமியர் சமூகத் தலைவர்களின் பேச்சுகள் குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இருந்து எத்தனை இந்துக்கள் வெளியேற்றப்பட்டனர்? அதை பற்றி ஏன் பேசுவது இல்லை? அதை பற்றி ஏன் கேள்வி எழுப்புவது இல்லை. ஹரித்வாரில் நடைபெற்றது பாஜகவின் நிகழ்ச்சியும் இல்லை. இந்து சாமியார்கள் அரசியல் இல்லாமல் தங்களது நம்பிக்கைகளை முன்வைத்து பேசி இருக்கின்றனர். அவர்களது பேச்சுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை.
தேசதுரோகம் என்பது வேறு விவகாரம். சூரிய நமஸ்காரம் செய்வதை எதிர்க்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு என்ன உரிமை இருக்கிறது? ஹரித்வாரில் என்ன பேசினார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து கேள்வி கேட்டால் பதில் தருகிறேன். நீங்கள் ஒரு பத்திரிகையாளர் போல பேசவில்லையே.. ஒரு குறிப்பிட்ட கும்பலின் ஏஜெண்ட் போல பேசுகிறீர்களே? இவ்வாறு கேசவ் மவுரியா கூறினார். இதனைத் தொடர்ந்து காலர் மைக்கை கழற்றி வைத்துவிட்டு, வீடியோ பேட்டியை முழுமையாக டெலீட் செய்ய வேண்டும் என எச்சரித்தார். கேசவ் மவுரியாவின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications