ராகுலை விடுங்க.. அடுத்ததாக எம்பி பதவியை இழக்கும் அப்சல் அன்சாரி.. பின்னணியில் பாஜக எம்எல்ஏ வழக்கு
லக்னோ: ‛மோடி' பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து இன்னொரு எம்பியான அப்சல் அன்சாரியும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார். இவரது தகுதி நீக்கத்தின் பின்னணியிலும் பாஜக எம்எல்ஏவின் வழக்கு தான் உள்ளது.
2019ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்தார். அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில், ‛‛மோடி பெயர் கொண்டவர்கள் ஏன் திருடர்களாக உள்ளனர்?'' என கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையானது.

இதையடுத்து ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடாளுமன்ற லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தியை போல் இன்னொரு எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார். அதாவது உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் அப்சல் அன்சாரி. இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர். இவரது சகோதரர் பெயர் முக்தார் அன்சாரி. இவரும் அரசியல்வாதியாவார்.
இந்நிலையில் தான் கடந்த 2007 ம் ஆண்டு பாஜக எம்எல்ஏ கிருஷ்ணஆனந்த் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்தார் அன்சாரி மற்றும் எம்பியாக உள்ள அப்சல் அன்சாரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது இந்த வழக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பகுஜன் சமாஜ் எம்பியான அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதன்மூலம் அப்சல் அன்சாரி தனது எம்பி பதவியை இழக்க உள்ளார்.
அதாவது இந்தியாவில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எம்பி, எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்கிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சூரத் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் அப்சல் அன்சாரியும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications