80 லோக்சபா தொகுதி.. பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த காங்.. தொடங்கும் உத்தர பிரதேச ஜோடோ யாத்திரை
லக்னோ: பாஜகவின் கோட்டையாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை போல் உத்தர பிரதேசத்தில் ‛‛உத்தர பிரதேச ஜோடோ யாத்திரை' தொடங்கி நடைபெற உள்ளது. அதோடு இதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் பாஜக வடஇந்தியாவில் மிகவும் பலம்வாய்ந்த கட்சியாக உள்ளது.

இதனை அறிந்துள்ள காங்கிரஸ் ‛இந்தியா’ கூட்டணி மூலம் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டு வருகிறது. அதோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே காங்கிரஸ் தனது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
குறிப்பாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட மாநிலம் என்றால் உத்தர பிரதேசம் தான். இங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களை பெற்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும்.
ஆனால் உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற முடியாமல் உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 62, பகுஜன் சமாஜ் கட்சி 10, சமாஜ்வாதி 5, ஏடிஎஸ் 2 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சியும் 1 இடத்தில் மட்டுமே வென்றது. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த நிலையில் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் வென்றார்.
இந்நிலையில் தான் இந்த முறை உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதன்படி தான் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தியது போல் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் ‛உத்தர பிரதேச ஜோடோ யாத்திரை’ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரை வரும் 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 11 மாதங்கள் கழித்து உத்தர பிரதேச ஜோடோ யாத்திரை தொடங்க உள்ளது. இந்த யாத்திரை என்பது மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின்போது பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து எடுத்து கூற உள்ளனர். அதோடு மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை என்பது உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத், மீரட், பரேலி, பிஜ்னோர் உள்பட பல மாவட்டங்களை கடந்து அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி அன்று சீதாபூரில் உள்ள நைமிஷாரண்யாவில் முடிவடையும். இந்த யாத்திரை என்பது மொத்தம் 25 நாட்கள் நடைபெற உள்ளது. யாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் பாஜகவை கட்டுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications