"நிரூபிச்சிட்டோம்.. பாஜக ஒன்றும் ஒடுக்க முடியாத கட்சி அல்ல".. அகிலேஷ் யாதவ் அதிரடி
பாஜகவை வீழ்த்துவோம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்
லக்னோ: பாஜகவின் தொகுதி எண்ணிக்கையை தங்களால் குறைக்க முடியும் என்றும், பாஜக ஒன்றும் ஒடுக்க முடியாத கட்சி அல்ல என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலையில் இருந்தது.. இந்த முறை சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், சர்ச்சைக்குரிய இடங்களான உன்னாவ், ஹத்ராஸ், லக்கிம்பூர் கேரி ஆகிய தொகுதிகளிலும் பாஜக வென்றதுதான் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கனவில் இருந்த அகிலேஷ் யாதவ் சற்று அதிர்ந்தே போயுள்ளார்.
வென்றாலும் பாஜகவுக்கு உறுத்தலைக் கொடுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியின் 10% வாக்குகள் அதிகரிப்பு!
புதிய கூட்டணி
இந்த முறை ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம், ஷிவ்பால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாதி, அப்னா தளம் (கமேராவாதி) மற்றும் மஹான் தளம் கட்சி போன்ற சின்ன சின்ன கட்சிகள் என்றும் பாராமல் அகிலேஷ் கூட்டணி வைத்தார்.. காரணம், இந்த கட்சிகள் ஜாட் சமூகத்தினர் மற்றும் ஆங்காங்கே வட்டார அளவில் செல்வாக்கு கொண்டவை என்பதாலேயே புது வியூகம் எடுத்தார். கூட்டணிக்கு ஆதரவு அமோகமாக கிடைக்கும் என்றும் கணக்கு போட்டார். ஆனால், இந்த கூட்டணி முயற்சி கடந்த முறை போலவே இந்த முறையும் தோல்வியை சந்தித்தது.
அகிலேஷ் யாதவ்
அவர் போட்டியிட்ட தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ளார் என்றாலும், அதீத நம்பிக்கைதான் அலட்சியமாக மாறி அவர் தீவிரமாக வேலை செய்யவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் இப்போதே கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர்.. எனினும், பாஜகவே எதிர்பாராத விதமாக பிற்படுத்தப்பட்ட தலைவர்களை தன் வசம் இழுத்த அகிலேஷ் யாதவ் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுத்ததை மறுக்க முடியாது. அதனால்தான், அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் இருந்து சிலரை தங்களது கட்சிக்கு இழுக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது.
நிறைய இடங்கள்
ஒருபக்கம் அகிலேஷூக்கு இது அதிர்ச்சி என்றாலும் பாஜகவுக்கும் அதிர்ச்சிதான்.. காரணம், கடந்த முறையை விட இந்த முறை அகிலேஷ் கட்சி நன்றாக வளர்ந்துள்ளது.. நிறைய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. பாஜக தனியாக களத்தில் நின்று கடந்தமுறை பிடித்த இடங்களை விட, இரு மடங்குக்கும் அதிகமான இடங்களை அகிலேஷ் கைபற்றியுள்ளதே பாஜகவுக்கு ஷாக் தரும் செய்தியாகும்..
தொடரும்
இந்நிலையில் அகிலேஷ் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், பாஜகவின் தொகுதி எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம் என்றும், இந்த சரிவுகள் மேலும் தொடரும், பாஜகவின் பாதிக்கும் மேற்பட்ட பொய்களை துடைத்தெறிந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.. இந்த தேர்தலில் இரண்டரை மடங்கு சீட் எண்ணிக்கையை அதிகரித்ததற்கு வாக்காளர்களுக்கு தன்னுடைய நன்றி தெரிவிப்பதாக கூறிய அகிலேஷ், வாக்குப்பங்கில் ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பொது நலனுக்கான தங்களது போராட்டம் தொடரும், பாஜக ஒன்றும் ஒடுக்க முடியாத கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துள்ளோம்" என்றும் கூறியுள்ளார்.