உத்தர பிரதேச தேர்தலை ஒத்திவைக்க பிரதமர், தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வேண்டுகோள்
லக்னோ: நாடு முழுவதும் ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்திவைக்குமாறு பிரதமர் & தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என வியூகம் அமைத்து அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
பிரதமர் பதவி பறிபோகும் அச்சம்..திருப்பதி ஏழுமலையானிடம் மகிந்த ராஜபக்சே தஞ்சம்!
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேபோல பிரதமர் மோடியே உத்தரப் பிரதேசத்திற்குக் கடந்த சில வாரங்களில் பல முறை சென்று, பல முக்கிய நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அதேபோல உபி-இல் சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரசும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் கூட தேர்தல் பணிகள் மெல்லச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தலை ஒத்திவைக்கலாம்
இந்தச் சூழ்நிலையில், ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்திவைக்க அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஓமிக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலை ஒத்திவைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது. மேலும் நாட்டு மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்தைக் கையிலெடுத்த பிரதமர் மோடியின் முயற்சிகளையும் நீதிமன்றம் பாராட்டியது.
அரசியல் பேரணிகள்
அரசியல் கட்சிகள் அரசியல் பேரணிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சேகர் யாதவ் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பின் 21வது பிரிவை வலியுறுத்தி, அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அரசியல் பேரணிகளை இப்போது நிறுத்தப்படாவிட்டால், இரண்டாவது அலையை விட மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உயிர் இருந்தால், நமக்கு உலகம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓமிக்ரான் கேஸ்கள்
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பட்டியலிடப்படுவதால். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலையைச் சுட்டிக்காட்டிய பின்னர் நீதிபதி இந்த கருத்துகளைக் குறிப்பிட்டார். ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதி, இது குறித்த சில தரவுகளையும் மேற்கோள்காட்டி. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
மே. வங்க தேர்தல்
மேலும், அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேச கிராம பஞ்சாயத்துத் தேர்தல்கள் மற்றும் வங்காள சட்டமன்ற தேர்தல்களால் நிறையப் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. வரவிருக்கும் உபி சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவது சாத்தியமற்றது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.