72 மணி நேரம்.. 304 பேர் கைது.. பல இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு.. உ.பியில் என்ன நடக்கிறது?
லக்னோ: நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசம் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது. தற்போது 72 மணிநேரம் முடிவடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் 304 பேர் கைது செய்யப்பட்டு 4 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா, மற்றும் ஜம்மு காஷ்மீரின் பாதேர்வாஹ் பகுதியில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் பற்றி மே 27 ல் தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் நவீன் குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இருவரையும் கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
வெள்ளிக்கிழமை வெடித்த போராட்டம்
நுபுர் சர்மா மீது டெல்லி, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர். நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன.
ஜார்கண்டில் என்ன?
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையானதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 இஸ்லாமியர்கள் இறந்தனர். மேலும் 10 போலீசார் உள்பட 20 பேர் காயமைடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் என்ன?
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடந்த போராட்டத்தில் பாஜக அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும்52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தடை உத்தரவை மீறி நேற்று வன்முறை நடந்த இடத்தை பார்க்க சென்ற சுகாந்த் மஜூம்தாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜகவினர் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர். மாநில பாஜக தவைர் சுகாந்த் மஜூம்தார் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். வன்முறையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு பொது செயலாளருமான அபு சோகைல் சார்பில் காந்தி போலீஸ் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நுபுர் சர்மா மீது புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீர் நிலவரம் என்ன?
மேலும் ஜம்மு காஷ்மீரில் தொடா மாவட்டம் பாதேர்வாஹ் பகுதியிலும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடந்தது. இதையடுத்து பாதேர்வாஹ் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இன்றும் 3வது நாளாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருவர் கைது
இதற்கிடையே வெள்ளிக்கிழமை ஜூம்மா மசூதிக்கு வெளியே போராட்டம் நடந்தது. இதில் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களுக்கு எதிரான வாசகங்கங்கள் அடங்கிய பதாகைகள் வைத்திருந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பேராட்டம் தொடர்பாக நேற்று இரவு 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருபிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 304 பேர் கைது
உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் வெள்ளிக்கிழமை மதியம் சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத்தில் பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாகின. வாகனங்கள் தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று காலை நிலவரப்படி வன்முறை தொடர்பாக பிரக்யாராஜில் 91 பேர், சாரன்பூரில் 71 பேர், ஹத்ராஸில் 51 பேர், மொரடாபாத்தில் 3 பேர், பெரோசாபாத்தில் 15 பேர் அம்பேத்கார் நகரில் 34 பேர் என மொத்தம் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
4 பேரின் வீடுகள் இடிப்பு
மேலும் வன்முறையாளர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகின்றன. நேற்று சாரன்பூர் வன்முறை தொடர்பாக முசாமில் மற்றும் அப்துல் வாகிர் ஆகியோரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. பிரக்யாராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக இன்று மதியம் ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதிகள் இடிக்கப்பட்டன. இவர்கள் வன்முறை தொடர்பாக கைதாகி உள்ள நிலையில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக கூறி உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் மேலும் ஜூன் 3ல் கான்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் ஹயத்தின் நெருங்கிய உறவினர் முகமது இஷ்தியாக்கின் ஸ்வரூப் நகர் வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டது. ஜூன் 3 முதல் உத்தர பிரதேசத்தில் மொத்தம் 7 இடங்களில் வன்முறை நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதரவு ஊர்வலத்தினர் மீதும் வழக்கு
இதுதவிர உத்தர பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று மாலை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலமானது தடை உத்தரவை மீறி நடந்தது. இதனால் ஊர்வலம் தொடர்பாக கோபி கஞ்ச் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவீன் குமார் ஜிண்டால் கோரிக்கை
இதற்கிடையே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நவீன் குமார் ஜிண்டால் டுவிட்டரில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில் ‛‛பலர் எனது விலாசத்தை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதனால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தலை சந்திக்கிறது. இதனால் என்னை பற்றியும், எனது குடும்பத்தினர் பற்றியும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பணிவோடு கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
கடந்த 72 மணிநேர நிலவரம்
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் சர்ச்சையால் இந்தியாவில் கடந்த 72 மணிநேரத்தில் மேற்கண்ட போராட்டங்கள், வன்முறைகள் நடந்துள்ளன. இதில் பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.