திருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை.. மணப்பந்தலை பந்தாடியது.. தெறித்து ஓடிய மணமகன்.. வைரல் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை அங்கிருந்த கார்களை சேதப்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாஜ் மாவட்டம் ஆம்பலாப்பூர் கிராமத்தில் கடந்த ஜூன் 11-ம் தேதி திருமண விழா நடந்தது.
அந்த திருமண விழாவில் மணமக்களை ஊர்வலமாக அழைத்து செலவதற்காக யானை ஒன்று கொண்டு வரப்பட்டது.
வைலண்டாக மாறிய யானை
மணமகன் ஆனந்த் திரிபாதி யானை மீது அமர்ந்து திருமணம் நடக்கும் இடம் நோக்கி வந்தார். மேள தாளம் முழங்க ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் மணமகன். திருமணம் நடக்கும் இடத்தை வந்தடைந்ததும் அங்கு மணமகனை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த வெடிச் சத்தம் கேட்டதும் சைலண்டாக இருந்த யானை வைலண்டாக மாறியது.
தெறித்து ஓடிய மணமகன்
திடீரென உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற யானை அங்கிருந்த 2 கார்கள் உள்ளிட்ட வாகனங்களை தூக்கி பந்தாடியது. இதனால் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பொதுமக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். மணமகனும் பதறியடித்துக் கொண்டு ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.
சமாதானம் அடைந்தது
யானையின் மீது அமர்ந்துள்ள பாகன் அதனை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அதனை ஏற்க மறுக்கும் யானை பிளறியபடி அங்கும் இங்கும் ஓடுகிறது. துதிக்கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி வீசுகிறது. திருமண பந்தலையும் துவம்சம் செய்கிறது. கடைசியில் ஒருவழியாக பாகன் செய்த முயற்சியால் யானை சமாதானம் அடைகிறது.
மறக்க முடியாத நாள்
ஆனால் யானை செய்த ரகளையால் உற்றார், உறவினர்களுடன் கலகலப்பாக இருந்த திருமண விழா ஒரு சில நிமிடத்தில் அப்படியே தலைகீழாக மாறி விட்டது. மணமகன் ஆனந்த் திரிபாதிக்கு இந்த கல்யாணம் மறக்க முடியாத நாளாக மாறி விட்டது.