விவசாயிகள் போராட்டச் சம்பவம்: சிறைக்கு அனுப்பப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா.. நாளை மீண்டும் விசாரணை!
லக்னோ: விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றிய சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழியாக வரும் பாஜகவினரின் வாகனங்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி வந்தனர். அது போல் அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் காருக்கும் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் காரை விவசாயிகள் போராட்டத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

8 பேர் பலி
இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியாகிவிட்டனர். அந்த 8 பேரில் ஒரு பத்திரிகையாளரும் ஆஷிஷின் கார் டிரைவரும் இறந்தனர். இந்த நிலையில் காரை ஏற்றி விவசாயிகளை கொன்ற ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யக் கோரி வரும் 18 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தையும் விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

12 மணி நேரம்
தலைமறைவாக இருந்த ஆஷிஷ் மிஸ்ராவை சிறப்பு படையினர் தேடி வந்த நிலையில் அவரிடம் நேற்றைய தினம் 12 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 40 கேள்விகளை சிறப்பு படையினர் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் எந்த கேள்விக்கு ஆஷிஷ் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிபதி
அவரை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப போலீஸார் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஆஷிஷ் தரப்பு வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால் தற்சமயம் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான் அவர் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறாரா என்பது தெரியவரும்.

அஜய் மிஸ்ரா
இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் ஏற்கெனவே ஆஷிஷின் நண்பர்கள் லவகுசா, ஆஷிஷ் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் தான் இல்லை என்றே மீண்டும் மீண்டும் கூறி வந்தார் ஆஷிஷ் மிஸ்ரா. இந்த சம்பவத்தில் இவருடைய தந்தையும் மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ராவையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications