போலீஸ் கண்ணு முன்னாடியே உ.பி. ரவுடியை கும்பல் சுட்டுச்சே.. பதிலுக்கு ஏன் போலீஸ் சுடவில்லை?- விளக்கம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 22 வினாடியில் 15 முதல் 20 முறை துப்பாக்கியால் சுட்டு முன்னாள் எம்பி ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை 3 பேர் கும்பல் கொன்ற நிலையில் அவர்கள் மீது போலீசார் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்ற சந்தேகங்கள் ஏற்பட்டு சில கேள்விகள் எழுந்த நிலையில் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் அகமது. இவரது சகோதரர் அஷ்ரப். ஆதிக் அகமது 5 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாவும் இருந்துள்ளார். இவர் சமாஜ்வாதி மற்றும் அப்னா தளம் கட்சியில் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்த வாரணாசி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியும் தோல்வியை தழுவினார். அவர் வெறும் 855 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆதிக் அகமது மீது 100க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு ஆதிக் அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீதான நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு வழக்கில் ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப்புக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக இரவில் பிரக்யாராஜ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது பத்திரிகையாளர்கள் போல் வந்த 3 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. மேலும் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டபோது அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப்பை 3 பேர் கும்பல் போலீஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்பு சுட்டுக்கொல்லும் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மொத்தம் 22 வினாடிகளில் 15 முதல் 20 முறை 3 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இந்நிலையில் தான் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை 3 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பத்திரிகையாளர்கள் போல் வந்து பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் கண்முன்னே இருவரையும் 3 பேர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது 3 பேரையும் போலீசார் பிடித்து கொண்டனர்.
இந்நிலையில் தான் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோரை சரமாரியாக சுட்டு கொன்ற 3 பேர் கும்பல் மீது ஏன் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்ற கேள்வி எழந்துள்ளது. அதாவது உத்தர பிரதேசத்தில் சமீபகாலமாக ரவுடிகள் மீது போலீசார் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தும் நிலையில் தற்போது போலீஸ் கஸ்டடியில் இருந்த 2 பேரை 3 பேர் கும்பல் சுட்டு கொன்றதில் போலீஸ் அதிரடி காட்டாதது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனை பலரும் சந்தேகங்களாகவும் எழுப்பினர்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‛‛என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் எதிர்வினையாற்றுவதை உடனே யோசிக்க முடியவில்லை'' என கூறியுள்ளனர். இதுபற்றி டிஜிபி ஏகே ஜெயின் கூறுகையில், ‛‛உண்மையிலேயே நடந்த சம்பவம் மிகவும் வேகமாக நடந்துவிட்டது. இதனால் போலீசாரால் உடனே ரியாக்ட் செய்ய முடியவில்லை. மேலும் தொழில்முறையின் அடிப்படையில் பார்த்தால் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பதும் புத்திச்சாலித்தனமாக இருக்காது'' என கூறியுள்ளார்.

இதுபற்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மூவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தால், இரண்டு கொலைகளின் பின்னணியில் உள்ள சதியை வெளிக்கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். மேலும் அந்த வழக்கில் உள்ள ஆதாரங்களை திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கும். இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல் இருந்திருக்கலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications