அயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்
Recommended Video
லக்னோ: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்க உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

அதற்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணிநேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருக்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது வதந்திகள் ஏதும் சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்க போலீசார் கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தி மாவட்ட நிர்வாகமும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளிகூடங்களில் 8 தற்காலிக சிறைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்பர்பூர், தண்டா, ஜலால்பூர், ஜெய்த்பூர், பைதி மற்றும் அல்லாபூர் ஆகிய இடங்களில் இந்த தற்காலிக சிறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications