தாஜ்மஹால் மர்மம்.. ‘பூட்டிய அறைகளுக்குள் இந்து கடவுள் சிலைகள்’ - திறக்கச் சொல்லுங்க - பா.ஜ.க மனு!
லக்னோ: தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி டாக்டர் ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் பா.ஜ.க நிர்வாகி ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், தாஜ்மஹாலில் உள்ள சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. உண்மைகளைக் கண்டறிய இந்த அறைகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தாஜ் மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது. தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக அவர் இந்த தாஜ்மஹாலை ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் கட்டினார்.
தாஜ்மஹால் 1983-ல் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் சிறந்த கட்டடக்கலை என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 2007-ம் ஆண்டு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

மும்தாஜின் கல்லறை
ஷாஜஹானின் காதல் மனைவி மும்தாஜ் 14ஆவது குழந்தைப்பேற்றின் போது காலமானார். மும்தாஜின் நினைவாக பளிங்குக் கற்களால் பிரமாண்ட தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான், மண்டபத்தின் நடுப்பகுதிக்குக் கீழே ஓர் அறை அமைத்து அங்கே மும்தாஜின் உடலை வைத்து கல்லறையாக தாஜ்மஹாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.

இன்னொரு கதை
ஒருசிலர், தாஜ்மஹால் என்பது ஷாஜகானால் கட்டப்பட்டதே அல்ல. அது பலநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே கட்டப்பட்டு ஷாஜகானால் ஆக்கிரமிக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் கூறி வைக்கின்றனர்.
இந்திய அரசின் தொல்லியல் துறை, மும்தாஜின் கல்லறை இருப்பதாகக் கூறப்படும் தாஜ்மகாலின் கீழ்த்தளத்தை நிரந்தரமாக மூடியுள்ளது. இதனால் அந்த கீழ்த்தளத்தில் சிவன் கோயில் இருப்பதாகவும் அது வெளியில் தெரிந்தால் தாஜ்மஹால் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக மாறி நாட்டில் தேவையில்லாத மதக் கலவரங்கள் உண்டாகலாம் என்பதால் அரசே மூடி மறைப்பதாகவும் ஒரு கதை உலவுகிறது.

இந்து கோயில்
இந்நிலையில்தான், தாஜ்மகாலின் மர்மக் கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மங்களுக்கான விடையைத் தேடி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க நிர்வாகி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், சில இந்து அமைப்புகள் மற்றும் புனித துறவிகள் கூறியபடி, இந்த நினைவுச் சின்னம் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என தெரிவித்துள்ளனர். தேஜோ மகாளயா என்ற தாஜ் மகால் ஆனது ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ரகசிய அறைகள்
தாஜ்மஹாலின் கீழ் புறத்தில் 20 அறைகள் உள்ளன. அவை எப்போதும் மூடப்பட்டே உள்ளன. இந்த பூட்டிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, அந்த அறைகளைத் திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications