ஹத்ராஸ் சம்பவம்: பெண்களுக்கு நல்ல பண்பை சொல்லி கொடுங்க.. நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பாஜக எம்எல்ஏ
லக்னோ: பாலியல் குற்றங்களை தடுக்க அரசாங்கம் வாளை ஏந்தினாலும் ஒன்றும் தடுக்க முடியாது என்றும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கலாச்சாரத்தை சொல்லிக் கொடுத்தால் மட்டுமே அவற்றை தடுக்க முடியும் என கொஞ்சமும் பொறுப்பில்லாமல் மனசாட்சி இல்லாமல் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் சம்பவங்களால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. எனவே யோகி ஆதித்யநாத் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சுரேந்திர சிங்
இதுகுறித்து அந்த மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இது போன்ற பாலியல் வன்முறைகளை தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாசாரத்தையும் சடங்குகளையும் நல்ல பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

நல்ல பண்புகள்
அவ்வாறு கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையைத் தடுக்க முடியும். அரசும் நல்ல பண்புகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு சிறப்பாக செயல்பட முடியும். ஒரு அரசு எப்படி மக்களை காக்க வேண்டுமோ அதுபோல் பெற்றோர்களும் அவர்களின் பெண் குழந்தைகளுக்கு கலாசாரம், நல்ல பண்புகளுடன் சேர்த்து அடக்கமாக பேசவும் கற்று தர வேண்டும்.

ஆசிரியர்
நான் எம்எல்ஏவாக இருந்தாலும் நான் ஒரு ஆசிரியர் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமராஜ்ஜியத்தில் இது போன்ற பலாத்காரங்கள் ஏன் நிகழ்கின்றன என நிருபர் ஒருவர் கேட்டதற்கு பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்களை கட்சி பேதமின்றி கண்டிக்க வேண்டும். ஆனால் இந்த எம்எல்ஏவோ கண்டிக்கவும் இல்லாமல் எல்லா பழியையும் பெண்கள் மீது பெண்களை பெற்ற பெற்றோர் மீதும் போடுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் ஆசிரியர் எனக் கூறிக் கொள்ளும் இந்த எம்எல்ஏவோ இதுபோல் நாக்கில் நரம்பில்லாமல் ஒரு சாராரை மட்டும் பேசுவது சரியல்ல என மாநில மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications