கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட தாய்; 30 ஆண்டுக்கு பின் குற்றவாளிகளை பிடிக்க உதவிய மகன்! நடந்தது என்ன?
லக்னோ: கடந்த 1994 ஆம் ஆண்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட தாய்க்கு பிறந்த மகன், 30 ஆண்டுகள் கழித்து 2 குற்றவாளிகளை கைது செய்ய உதவி இருக்கிறார்.
சிறுவயதில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து நியூஸ் லாண்ட்ரி ஆங்கில இணையதளத்திடம் பாதிக்கப்பட்ட பெண் விளக்கியுள்ளார். அவர் எதிர்கொண்ட கொடுமைகளை வாசிக்கும் நமக்கே கோபத்தீ கொப்பளிக்கிறது.
நாம் எத்தனையோ கிரைம் திரில்லர் படங்களை, வெப் சீரீஸ்களை பார்த்திருக்கலாம். ஆனால், சவிதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கையில் நடந்த கொடுமையும், அவரை பலாத்காரம் செய்த கொடூரர்கள் கைது செய்யப்பட்ட விதமும் இதுவரை நாம் எதிலும் படித்திருக்கவோ, பார்த்திருக்கவோ முடியாது. அத்தனை பரப்பரப்புகளையும், வேதனைகளையும், அவமானங்களையும், திருப்பங்களையும் கொண்டது சவிதாவின் கதை.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சவிதா அப்போது அவருக்கு வயது 12. பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ள இவர், தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்து இருக்கிறார். சகோதரி ஆசிரியராகவும், அவரது கணவர் அரசு ஊழியராகவும் இருந்து வந்துள்ளார். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க, தாய், 4 சகோதரிகள், 2 சகோதரர்களுடன் ஹர்தோயில் வசித்து வந்திருக்கிறார். சவிதா பள்ளி முடித்து வந்த பிறகு மாலை நேரத்தில் சைக்கிளில் செல்வது வழக்கம்.

பலாத்காரம்
இவர் சைக்கிளில் செல்லும்போதெல்லாம் சில ஆண்கள் கூட்டமாக நின்று வழிமறித்து கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். ஒருநாள் சவிதா வீட்டில் தனியாக இருந்ததை கண்ட அந்த கும்பலை சேர்ந்த ராஜி (20), ஹசன் (22) ஆகிய 2 சகோதரர்கள் வீட்டுக்குள் ஏறிக்குதித்து சுமார் 45 நிமிடங்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இருக்கிறார் சவிதா. அடுத்த 6 மாதங்களில் எப்போதெல்லாம் தனியாக இருந்திருக்கிறாரோ அப்போதெல்லாம் இருவரும் வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்ததாக கூறுகிறார் சவிதா.

12 வயதில் கர்ப்பம்
தனக்கு முதன்முதலில் மாதவிடாய் ஏற்பட்ட பிறகு, அடுத்தடுத்த மாதங்களில் மாதவிடாய் தள்ளிப்போனதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பள்ளியைவிட்டு நின்றதாகவும் சவிதா தெரிவித்து உள்ளார். உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் சவிதா 12 வயதில் கர்ப்பம் அடைந்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

கொலை மிரட்டல்
அதன் பிறகே நடந்தது அனைத்தையும் தனது சகோதரியிடம் சவிதா கூறியுள்ளார். கருக்கலைப்பு செய்ய முடியாது என்று தெரிவித்த மருத்துவர், காவல் நிலையத்தில் புகாரளிக்க சொல்லியுள்ளார். ஆனால், சவிதாவின் சகோதரியும், அவரது கணவரும் ராஜி மற்றும் ஹசன் ஆகியோரின் பெற்றோரை சந்தித்து புகாரளித்துள்ளனர். பெற்றோர் புகாரை ஏற்க மறுத்த நிலையில் அன்று இரவே ராஜியும் ஹசனும் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பெற்றோர் புறக்கணிப்பு
இதனால் சவிதா, அவரது சகோதரி மற்றும் கணவருடன் ராம்பூருக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனை அவமானமாக கருதிய சவிதாவின் சகோதரியின் கணவர் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். நடந்தது எதுவும் சவிதாவின் பெற்றோருக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் இதனை அறிந்த சவிதாவின் தந்தை குடும்பத்தின் கவுரவத்தை கெடுத்துவிட்டதாக கூறி இருக்கிறார். தாயோ கிராமத்துக்கு வர வேண்டாம் என்று கூறி அவரை ஏற்க மறுத்துவிட்டார்.

திருமணம்
இதனால் 13 வயதிலேயே சவிதா குழந்தை தொழிலாளியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. சவிதாவிடம் அவரது குழந்தை காட்டப்படவே இல்லை. கடந்த 2000 ஆம் ஆண்டு சவிதாவுக்கு திருமணம் நடைபெற்றது. 2002 ஆம் ஆண்டு இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்படி சவிதாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்க, 2006 ஆம் ஆண்டு அவரது கணவருக்கு உண்மை தெரியவந்திருக்கிறது.

அடுத்த சோகம்
கவுரவம் போய்விட்டது என்று கூறி கணவர் ஆண் குழந்தையுடன் சவிதாவை வீட்டைவிட்டு விரட்டிவிட்டுள்ளார். அதன் பின்னர் லக்னோவுக்கு மகனுடன் சென்று தங்கியுள்ளார் சவிதா. வாழ்வாதாரத்துக்காக கடினமான தொழில்களையும் செய்து வந்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சவிதாவை 13 வயது சிறுவன் ஒருவன் சந்தித்துள்ளான். அவனிடம் நீங்கள் யார் என்று கேட்க, உங்கள் மகன் என்று அந்த சிறுவன் கூறி அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் சவிதா. அந்த சிறுவன் பெயர் ராஜு (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).

கேலி கிண்டல்
சவிதா சிறுமியாக இருந்தபோது பிறந்த ராஜுவை அவரது உறவினரிடம் வளர்ப்பதற்காக விட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சிறுவனை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. சவிதாவுக்கு நேர்ந்தது கிராம மக்களுக்கு தெரிந்ததால் ராஜுவின் பிறப்பை வைத்து கிராம மக்கள் கேலி செய்துள்ளனர். இதனால், அவரை வளர்ந்த பெற்றோர் சவிதாவிடம் லக்னோவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உண்மை அறிந்த ராஜு
ராஜு எப்போதெல்லாம் தனது தந்தை குறித்து கேள்வி எழுப்புவாரோ அப்போதெல்லாம் அவரை அடித்து அமைதியாக இருக்க சொல்வாராம் சவிதா. ஒருநாள் தந்தையின் பெயரை கேட்டு ராஜு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அதன் பிறகே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கியுள்ளார் சவிதா. கடந்த 2019 ஆம் ஆண்டு உண்மையை அறிந்த ராஜு, போலீசிடம் புகாரளிக்க வற்புறுத்தியுள்ளார்.

போலீசில் புகார்
ராஜு சமாதானப்படுத்திய பிறகு போலீசில் புகாரளிக்க சம்மதித்த சவிதா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஷாஜகான்பூருக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார். அங்குள்ள சதார் பஜார் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். தன்னை பலாத்காரம் செய்தவர்கள், பெயர்கள் தனக்கு தெரியாது என்றும், அவர்களின் படங்கள், முகவரி எதுவும் தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குப்பதிய மறுப்பு
போலீசார் இந்த வழக்கில் எந்த ஆவணங்களும் இல்லை என்று வழக்குப்பதிய மறுத்து இருக்கின்றனர். அதன் பிறகே சவிதாவுக்கு வழக்கறிஞர் முஹம்மது முக்தார் கானின் அறிமுகம் கிடைத்து இருக்கிறது. அவரது உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு முகம் தெரியாத இருவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

செல்போனில் பேசிய சவிதா
1994 ஆம் ஆண்டு நடந்த குற்றம் என்பதால் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று வழக்கறிஞர் முஹம்மது முக்தார் கான் கூறியுள்ளார். அதன் பின்னர் போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட வழக்குப்பதிவு செய்த 25 நாட்கள் கழித்து குற்றவாளிகள் ராஜி மற்றும் ஹசன் என போலீசார் கண்டுபிடித்து இருக்கின்றனர். இவரும் அப்பகுதியில் லாரி ஓட்டுனர்களாக வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

திமிராக பேசிய ராஜி
எனவே சவிதா மெக்கானிக் கடைகளில் விசாரணை நடத்தியபோது ராஜியின் செல்போன் எண் கிடைத்துள்ளது. உடனே ராஜியை தொடர்புகொண்டு தன்னை பற்றி சவிதா அறிமுகம் செய்தபோது, "நீ இன்னும் உயிரோடுதான் இருக்கிறாயா" என்று கேட்டுள்ளார். உடனே சவிதா, "நீங்கள்தான் இனி சாக போகிறீர்கள்" என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து இருக்கிறார். மீண்டும் ராஜி சவிதாவை அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை.

டிஎன்ஏ பரிசோதனை
பின்னர் ராஜியின் எண்ணை காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார் சவிதா. போலீசார் ராஜியையும் ஹசனையும் விசாரணைக்காக அழைத்துள்ளனர். தொடக்கத்தில் மறுத்த இருவரும் பின்னர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். ஆனால், அவர்கள்தான் குற்றவாளிகள் என்று போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. அதன் பின்னர் இருவரது டிஎன்ஏ மாதிரிகளையும், ராஜுவின் டிஎன்ஏ மாதிரியையும் சேகரித்த போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐதராபாத்தில் கைது
இதில் ஹசனின் டிஎன்ஏ மாதிரி ராஜுவின் மாதிரியுடன் ஒத்துபோயுள்ளது. இதற்கிடையே இருவரும் ஐதராபாத்தில் தலைமறைவாகிவிட இம்மாதம் அவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை. இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு திறக்கப்படும் என்றுதான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் ராஜி. ஹசனும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சவிதாவின் நம்பிக்கை
தனது உரிமைக்காக தொடர்ந்து சண்டையிடுவேன் என்று துணிச்சலாக கூறி இருக்கிறார் சவிதா. தன்னுடைய கதை பல பெண்களுக்கு பேசுவதற்கான துணிச்சலை தரும் என்று அவர் நம்புகிறார். மேலும் தனது மகன் ராஜுவின் வாழ்க்கை இப்போதுதான் முறையாக செல்லத் தொடங்கி இருப்பதால் அவரது பெயர் மற்றும் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications