மக்கள் சிக்கலுக்கு தீர்வு காண சட்டமன்றத்தை சிறப்பாக பயன்படுத்துங்கள்.. எம்எல்ஏக்களுக்கு யோகி அட்வைஸ்
லக்னோ: எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பதிலளிப்பார்கள் என்றும், மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண சட்டமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக யாரும் 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்ததில்லை. ஆனால் இந்த முறை யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஆனால் கல்வி, சுகாதாரம் மற்றும் என்கவுண்டர் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகின்றன.

இந்நிலையில்தான் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பதிலளிப்பார்கள் என்றும், மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண சட்டமன்றத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பொது மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து அனைத்து உறுப்பினர்களும் சபையை ஆரோக்கியமான விவாதத்தின் மையமாக மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். உறுப்பினர்கள் தங்கள் கருத்தை திறம்பட சபையில் வைப்பார்கள், ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
சபாநாயகர் அனுமதி அளித்தால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டால், வெள்ளம் மற்றும் வறட்சி குறித்த முக்கியமான பிரச்சினை மற்றும் அதன் தீர்வு குறித்து அவையில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுவதால் மாநிலத்தின் நிலைமை கொஞ்சம் மோசமடைந்திருக்கிறது. எனவே இது குறித்தும் எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications