எல்லாமே மாறிடுச்சு.. யோகி அப்படி சவால் விட்டு பேசியதுமே.. மிரண்டு பார்த்த உ.பி போலீஸ்
லக்னோ: பிரச்சனைகளுக்கு பெயர் பெற்று இருந்த உத்தரப்பிரதேசம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு " பிரச்சனை தேசம்" என்று அழைத்தார்கள். ஆனால் இன்று உத்தரப்பிரதேசம் குறித்த மக்களின் பார்வை மாறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய கருவியாக மாறி உள்ளது என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் புதிதாக 217 சப்-இன்ஸ்பெக்டர்கள் (உளவு), 587 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் (கிளார்க்குகள்), 344 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் (அக்கவுண்ட்ஸ்) என மொத்தம் 1,148 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

அந்த விழாவில் காவல்துறையினர் முன்பு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நாங்கள் காவலர்களைதேர்வு செய்துள்ளோம். இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள போலீசாரில் கணிசமான பெண்களும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்துவதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவும், கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசமும் சிறப்பாக வளர்ந்துள்ளன.
கடந்த ஆறு ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கலவரம் கூட நிகழவில்லை . உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளால், கூலிப்படைகளால் செய்யப்பட்ட குற்றங்களை ஏறக்குறைய ஒழித்துவிட்டோம். உத்தரப்பிரதேசத்தில் எந்த ஒரு தீவிரவாதச் சம்பவமும் நடைபெறவில்லை. எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் ஒரே வாரத்தில் 1.2 லட்சத்துக்கும் அதிகமான ஒலிபெருக்கிகளை மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றி உள்ளோம்.
பக்ரீத் , ராம நவமி மற்றும் ஈத் ஆகிய பண்டிகைகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எல்லா பகுதியிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்துள்ளது. நமது சாலையில் நமாஸ் இல்லை என்றால், ஹனுமான் சாலிசாவும் இல்லை. இங்கே பண்டிகை நாட்களில் பொதுமக்கள் எந்த இடையூரையும் சந்திப்பதில்லை. முன்பெல்லாம் முன்பு பண்டிகைகளின் போது பீதி நிலவியது .
மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மக்கள் தங்கள் மகள்களை மகிழ்ச்சியுடன் படிக்க அனுப்புகிறார்கள்.சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் உத்தரப் பிரதேசம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் முயற்சியால் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை நாட்டிலேயே முன்மாதிரியாக மாறி உள்ளது. பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கைக்காக, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 'மிஷன் சக்தி' என்ற பிரச்சாரம் தொடங்கி உள்ளோம்.
உத்தரப்பிரதேச காவல்துறையை நவீனமயமாக்கி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள அனைத்து 18 பிரிவுகளிலும் இப்போது சைபர் குற்றங்களை தடுக்க போலீஸ் ஸ்டேசன்கள் அமைத்துள்ளோம். முன்னதாக ஒரு ஏரியாவில் சைபர் போலீசார் இருவர் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சைபர் போலீஸ் ஸ்டேசனை அமைக்க வேலை செய்துவருகிறோம்.
உத்தரப்பிரதேச காவல்துறையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் இறந்தவர்களின் வாரிசுகள் 2,500க்கும் மேற்பட்டோருக்கு பணி வழங்கி உள்ளோம்.
முந்தைய ஆட்சிகளில் அரசு வேலையில் சேர்க்கை என்பது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. 2017 ஆம் ஆண்டு நான் உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற போது, அரசு பணிகளில் வெளிப்படுத்தமையை ஏற்படுத்துவதில் சவாலை எதிர்கொண்டேன். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தது.
ஆனால் அதனை சரி செய்து, கடந்த ஆறு ஆண்டுகளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அரசு வேலைகளை வழங்கி உள்ளேன். மேலும் அரசு வேலையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டது. இதனை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. புதிதாக காவல்துறையில் சேர்ந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காவல்துறையில சேர்ந்திருப்பது பெருமையாக உள்ளது .
உத்தரப்பிரதேச மாநிலம் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்பதால் தான் ரூ.36 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது. இங்கே தொழிலதிபர்கள், பெண்கள் உள்பட அனைவரிடமும் பாகுபாடும் இன்றி பாதுகாப்பு உணர்வை வளர்ப்பது காவல்களாகிய உங்களின் பொறுப்பு. நீங்கள் உங்கள் கடமைகளை மிகுந்த நேர்மையுடன் செய்ய வேண்டும் . காவல்துறைக்கென மாநிலத்தின் முதல் காவல்துறை தடயவியல் அமைப்பு தொடங்கப்படும். கோரக்பூரில் அண்மையில் சிறந்த தொழில் நுட்ப வசதிகளுடன் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி மற்றும் மகளிர் உட்காருவதற்கு இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கூறினார். இந்த விழாவில் உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், கேபினட் அமைச்சர் சுரேஷ் கன்னா, உள்துறை முதன்மைச் செயலர், சஞ்சய் பிரசாத், டிஜிபி விஜய் குமார், சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜி, பிரசாந்த் குமார், உத்தரப் பிரதேச காவல்துறை சீருடை பணியாளர் தலைவர் ரேணுகா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .












Click it and Unblock the Notifications