உ.பியில் சீட் ஷேரிங் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.. 11 தொகுதிகளில் உடன்பாடு.. அகிலேஷ் அறிவிப்பு!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணி உறுதி என்றும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் உடன்பாட்டை எட்டி வருவதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் அறிவித்துள்ளார்.
ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை முதலில் ஒன்றிணைத்து, கூட்டணி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தினார் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் பெங்களூர், மும்பை என அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தினர். இந்தக் கூட்டங்களில் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தான் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு வழக்கமாக மாநிலங்களில் நடைபெறும் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ளஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில், முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. ஒரே கூட்டணியில் இருப்பவர்களின் முரண்பட்ட நிலைப்பாடு சலசலப்பைக் கிளப்பியது
இந்நிலையில், நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என அறிவித்தார்.
இதனால், 'இந்தியா' கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சிகள் ஆளுக்கு ஒரு திசைக்கு இழுத்து வருவது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணியை உறுதி செய்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே மிக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இந்நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் என கூட்டணி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், "காங்கிரஸுடனான எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலுவான இடங்களுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது. இந்த போக்கு வெற்றி சமன்பாட்டுடன் முன்னேறும். 'இந்தியா' அணியும் 'பிடிஏ' (பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்) உத்தியும் வரலாற்றை மாற்றும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications