SIR விண்ணப்பத்திலேயே மோசடி.. வசமாக சிக்கிய தாய் - மகன்.. நாட்டிலேயே முதல் வழக்கு இதுதான்
லக்னோ: போலி வாக்காளர்களை நீக்குவதற்காக தான் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான விண்ணப்பத்தில் கூட மோசடி செய்தது தொடர்பாக தாய் - 2 மகன்கள் மீது உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படியான மோசடி தொடர்பாக முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR or Special Intensive Revision) பணி நடந்து வருகிறது. பீகாரை தொடர்ந்து தற்போது 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த 4ம் தேதி இந்த பணி தொடங்கியது.

சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த பணி நடந்து வருகிறது.
வாக்காளர்களாக இருப்போர் அதற்கான படிவங்களை வாங்கி முறையாக பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். அப்போது தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை என்பது இருக்காது. இந்த விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கான தேதி டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்படும். பிறகு பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்பது போலி வாக்காளர்களை நீக்குவது தான். இரட்டை வாக்குரிமை, வெளிநாட்டினர் பெற்றுள்ள வாக்குரிமை, இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாட்டிலேயே முதல் முறையாக வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையிலேயே மோசடி செய்ததாக தாய் - 2 மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாட்டிலேயே SIR நடவடிக்கை தொடர்பான பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு ராம்பூர் சட்டசபை தொகுதி உள்ளது. இந்த சட்டசபை தொகுதியில் வசித்து வருபவர் நூர்ஜஹான். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் அமீர் கான் மற்றும் டேனிஷ் கான்.
இவர்கள் 2 பேரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் பெயர் சேர்க்க தாய் நூர்ஜஹான் தனது மகன்களின் பெயர், விவரம் மற்றும் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக பிஎல்ஓ சார்பில் ராம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இவர்கள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 31 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‛சார்' நடவடிக்கையில் போலியான தகவல்களை கொடுத்தது தொடர்பாக பதியப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
இதுபற்றி ராம்பூர் மாவட்ட கலெக்டரான அஜய் குமார் திரிவேதி கூறுகையில், ‛‛வழக்கில் சம்பந்தப்பட்ட தனது மகன்கள் குறித்த தவறான தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு பெயர் சேர்க்க முயன்றார். மேலும் போலியாக கையெழுத்திட்டுள்ளார். கணினியில் ஏற்றும்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications