கலவரத்துக்காக வீட்டை இடிக்கல.. வழக்கமான நடவடிக்கைதான் - உச்சநீதிமன்றத்தில் யோகி அரசு விளக்கம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் ஜம்மியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
நுபுர் சர்மா.. அடுத்த டெல்லி முதல்வர் வேட்பாளர்.. அந்த கட்சி ஹிஸ்டரி அப்படி - போட்டுத்தாக்கிய ஓவைசி!
வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, மேற்கு வங்க காவல்துறையும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
போராட்டம்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் அவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
வீடுகள் இடிப்பு
இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது ட்விட்டர் கணக்கில், புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்தநாள் சனிக்கிழமை வரும் என எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் சஹாரன்பூர், பிரயாக்ராஜில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கைது செய்த போலீசார், அங்குள்ள வீடுகளை புல்டோசரை கொண்டு இடித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப்பிரதேச அரசு இடித்து தள்ளியது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் ஜம்மியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
யோகி அரசு விளக்கம்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விதிகளை மீறி வீடுகளை இடிக்கக்கூடாது என்ற அறிவுறுத்தியது. ஆனால், வீடுகளை இடிக்க தடை விதிக்கவில்லை. அதே நேரம் இதுகுறித்து விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் உபி அரசுக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அம்மாநில அரசு வழக்கிய நோட்டிசில், "15 நாட்களுக்கு முன்பே இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற தவறியதால் வீடு இடிக்கப்பட்டது. கலவரம் காரணமாக வீட்டை இடிக்கவில்லை. இது வழக்கமான நடவடிக்கைதான்." என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.