இந்துக்களை கேலி பண்ணாதீங்க..திமுகவுக்கு எதிராக ‘இந்தியா கூட்டணி’கட்சியிடம் இருந்து கிளம்பியஎதிர்ப்பு
லக்னோ: சனாதனம் தர்மம் மற்றும் வட இந்திய மாநிலங்கள் குறித்த சமீபத்திய திமுகவின் பேச்சு தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதாவது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தது. ஐந்து மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டுமே வென்றது.

வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை திரித்து மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜக தேர்தல் பிரசாரத்தில் பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. அதேபோல், தேர்தல் முடிவுக்கு பிறகு பாராளுமன்றத்தில் பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில் குமார், இந்தி மொழி அதிகம் பேசும் மாநிலங்களின் தான் பாஜகவால் வெல்ல முடியும்.
திமுகவை விமர்சித்த சமாஜ்வாடி: இந்த மாநிலங்களை நாங்கள் மாட்டு சீறுநீர் மாநிலங்கள் எனக் கூறுவோம் என்று கூறினார். செந்தில் குமாரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி கூட இந்தி பேசும் மாநிலங்களை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அவமதிப்பதாக விமர்சித்து இருந்தார். தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து செந்தில் குமார் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரினார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினும் செந்தில்குமார் எம்.பியை கண்டித்ததாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சி திமுகவை கடுமையாக சாடியுள்ளது. அகிலேஷ் யாதவுக்கும் நெருக்கமானவராக அறியப்படும் ஐபி சிங் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்து மதம் பிடிக்கவில்லை என்றால்: இஸ்லாம் குறித்து யாராவது ஏளனமாக பேசினால் முஸ்லீம்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் சில இந்துக்கள் தங்களது கடவுள், வேதம், புராணம், கலாசாரம் குறித்து கேலி கிண்டல் செய்கின்றனர். திமுக தலைவர்கள் இந்து மதத்தையும் கடவுள் பற்றியும் இழிவாக பேசுகிறார்கள். அவர்கள் இந்து மதத்தை துறந்து விட்டார்களா? கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டால், பிறகு இந்து மதத்தை எப்படி அவர்கள் விமர்சிக்கலாம்?" என்று கூறியுள்ளார்.
இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் புத்த மதத்திற்கோ அல்லது வேறு மதத்திற்கோ செல்லலாம். இந்து மதத்தை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இந்து மதத்தை விமர்சிப்பதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும்" எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications