ஷப்னமை தூக்கிலிடுபவர் யார் தெரியுமா?.. நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் 7 பேரை கொன்றதாக ஷப்னம் அலி என்ற பெண்ணை நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத் தூக்கிலிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக பெண் குற்றவாளியான ஷப்னம் தூக்கிலிடப்படுகிறார். இவருக்கான தூக்கு மேடை தயார் நிலையில் உள்ளது. யார் இந்த ஷப்னம்?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் நகரிலுள்ள பவன்கேடி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ஷப்னம் அலி. எம்ஏ படித்தவர். அவருக்கு 6 ஆம் வகுப்பு படித்த சலீமுடன் காதல் ஏற்பட்டது.
பெற்றோர்
இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் சலீம் வேண்டாம் என கூறி மறுத்துள்ளனர். ஆனால் ஷப்னத்திற்கோ காதல் கண்ணை மறைத்தது. 13 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி இரவு காதலனுடன் இணைந்து குடும்பத்தில் உள்ளவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளார்.
பாலில் மயக்க மருந்து
அதன்படி குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவர்கள் மயங்கி பிறகு காதலன் சலீமுடன் இணைந்து கோடாரியால் 7 பேரின் கழுத்தையும் வெட்டி கொலை செய்துள்ளார். யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்றால் ஷப்னத்தின் அம்மா, அப்பா, இரு அண்ணன்கள், அண்ணி, பிறந்து 10 மாதமான அண்ணனின் குழந்தை, மற்றொரு உறவினர் என 7 பேராவர்.
திருடர்கள்
7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சென்ற போலீஸிடம் திருட வந்தவர்கள் இது போல் செய்ததாகவும் அவர்களுக்கு பயந்து கொண்டு தான் பாத்ரூமில் மறைந்து கொண்டதாகவும் ஷப்னம் ஒரு பொய்யை கூறியுள்ளார். எனினும் ஷப்னம்தான் இதை செய்துள்ளார் என தெரிந்து அவரையும் சலீமையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 11 ஆண்டுகள் இந்த தண்டனையை எதிர்த்து போராடிய நிலையில் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தூக்கு தண்டனை
இதனால் இருவரும் தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. சிறையில் தூக்கு மேடையை தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. கடந்த முறையே ஷேங் மேன் பவன் ஜல்லாத் தூக்கு மேடையை பார்வையிட்டார். ஆனால் சில கோளாறுகள் இருப்பதாக சொல்லியதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. 58 வயதாகும் பவன் ஜல்லாத்தான் ஷப்னத்திற்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவார் என தெரிகிறது.
நிர்பயா குற்றவாளிகள்
நான்கு தலைமுறைகளாக இந்தியாவில் இவரது குடும்பம் தூக்குத் தண்டனை கைதிகளுக்கான தண்டனையை நிறைவேற்றி வருகிறார்கள். நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டவரும் பவன்தான். 150 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சிறைச்சாலையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தூக்கு மேடை தயார் நிலையில் உள்ளது. ஷப்னம் கைது செய்யப்பட்ட போதே இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு சிறையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 12 வயதாகிறது.