கனமழை, ஊரடங்கு தந்த பரிசு.. மீண்டும் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய வைத்த இமயமலை!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை சிகரங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் சஹாரான்பூரில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதாலும், கனமழை பெய்து ஓய்ந்ததையடுத்தும், காற்று மாசுபாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேகங்கள் விலகிய நிலையில் இமயமலையின் சிகரங்கள் தெளிவாகத் தெரிவது இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொடிய கிருமியான கொரோனாவினால் மனித இனம் மாபெரும் பேரழிவை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே ஓலமாக ஒலிக்கிறது. பிணக்குவியல்களால் மயானங்கள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலையடைய வைத்துள்ளது.
இந்த கொடுமைகளை எல்லாம் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறாள் இயற்கை அன்னை என சமூகவலைதளங்களில் பல வேதனைப் பதிவுகளைக் காண முடிகிறது. வேறு சிலரோ மனித இனம் வீடுகளுக்குள் அடைப்பட்டு கிடப்பதால் இயற்கை அன்னை தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயல்கிறாள். இதனால் நம் கண் முன்னே பல அதிசயங்களை காண முடிகிறது என்கின்றனர்.

மீண்டும் ஒரு அதிசயம்
அப்படிப்பட்ட ஒரு அதிசயம் தான் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் 2வது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதாலும், டவ் தே புயலின் காரணமாக கனமழை பெய்து ஓய்ந்ததையடுத்தும், அங்கு காற்று மாசுபாடு முற்றிலுமாக குறைந்துள்ளது.

பனி மூடிய சிகரங்கள்
இதன் காரணமாக மேகங்கள் விலகி சுமார் 150 கிலோ மீட்டர் அப்பால் உள்ள இமயமலையின் பனி மூடிய சிகரங்களை சஹாரான்பூரில் இருந்து பார்த்து ரசிக்க முடிகிறது. பனி போர்த்திய இமயமலையின் சிகரங்களை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர் உள்ளூர்வாசிகள். நேரில் சென்று பார்க்க முடியாத வெளியூர்க்காரர்களுக்கு இப்புகைப்படங்கள் கண்களுக்கு விருந்தாகி வருகின்றன.

வைரல் புகைப்படங்கள்
அப்படி ஒரு உள்ளூர்வாசியான துஷ்யந்த் குமார் என்பவர் எடுத்த பனி போர்த்திய இமயமலையின் புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. துஷ்யந்த் உட்பட பலர் பதிவு செய்த அற்புதகாட்சிகள் இந்த கொரோனா கொடிய காலத்திலும் நெட்டிசன்களை நெகிழ செய்துள்ளது. இந்தப் புகைப்படங்களைப் பார்த்து புத்துணர்ச்சி அடைந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்திலும் இதேபோல் இமயமலையின் பனி மூடிய சிகரங்களை சமவெளியில் இருந்து பார்க்க முடிந்தன. அதே அதிசயம் மீண்டும் நிகழ்ந்திருப்பது இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா எனும் கொடிய நோயினால் மனித குலத்தின் சுயநல மேகத்திரை விலகி இருப்பதாக அவர்கள் நெகிழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications