3 வேளை சோத்துக்கே கஷ்டம்..ரூ.13 கோடி ஜிஎஸ்டி கட்ட ஜூஸ் - முட்டை வியாபாரிகளுக்கு IT நோட்டீஸ்
லக்னோ: சாதாரண ஜூஸ் வியாபாரி மற்றும் முட்டை வியாபாரிகள் வருமான வரித்துறை நோட்டீசால் கலங்கி போய் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஜூஸ் வியாபாரியிடம் ரூ.7.79 கோடியும், முட்டை வியாபாரியிடம் ரூ. 6 கோடியும் ஜிஎஸ்டி கட்டும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் தான். இந்த நோட்டீசால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். இவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருமான வரித்துறையை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய பாஜக அரசு மிரட்டி வருகிறது என்றும், அரசியலில் பழிவாங்குவதற்கு வருமான வரித்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தான் வருமான வரித்துறை சாதாரண முட்டை விற்பனையாளர் மற்றும் ஜூஸ் விற்பனையாளரை கூட விடவில்லையே என்ற கேள்வி என்பது எழுந்துள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். இவர் தள்ளுவண்டியில் வைத்து முட்டை விற்பனை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் என்பது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛பிரின்ஸ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் டெல்லியில் மண்டலம் 3, வார்டு 33ல் சுமன் பெயரில் கம்பெனி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பெருமளவில் பணப்பரிவர்த்தனைகளை செய்துள்ளது. மொத்தம் ரூ.49.24 கோடிக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதற்கான 2022-23ம் ஆண்டுக்கான பில், பர்சேஸ் வவுச்சர் மற்றும் பரிமாற்றம் சார்ந்த ஆவணங்கள், வங்கி ஆணவங்கள் வழங்க வேண்டும். இதற்கு ரூ.6 கோடி சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசை பார்த்து பிரின்ஸ் சுமன் ஷாக் ஆகி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் தள்ளுவண்டியில் தான் முட்டை விற்பனை செய்து வருகிறேன். நான் டெல்லியை பார்த்தது கூட இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி என்னால் அங்கு நிறுவனம் தொடங்க முடியும்'' என்றார். இதுபற்றி பிரின்ஸ் சுமனின் தந்தையான தார் சுமன் மளிகை கடை வைத்துள்ளார். தார் சுமன் கூறுகையில், ‛‛உண்மையிலயே நாங்கள் ரூ.50 கோடி வைத்திருந்தால் நான் எதற்காக தினசரி செலவுக்கு அல்லல்படப்போகிறோம்'' என்றார்.
அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே தார்வாலி கலி எனும் இடத்தில் வசித்து வருபவர் முகமது ரஹீஸ். ஜூஸ் விற்பனை செய்து வருகிறார். இவருக்கும் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் பறந்துள்ளது. அதில் 2020-21ம் ஆண்டில் அவரது பெயரில் அதிகளவில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதற்கு ரூ.7 கோடியே 79 லட்சத்தை ஜிஎஸ்டியாக கட்ட வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முகமது ரஹீஸின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுபற்றி முகமது ரஹீஸ் கூறுகையில், ‛‛இந்த நோட்டீஸ் ஏன் வந்துள்ளது என்று எனக்கு தெரியவில்லை. நான் ஜூஸ் தான் விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் பார்த்தது இல்லை. இந்த நோட்டீஸ் வந்துள்ளதால் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது கூட எனக்கு தெரியவில்லை. அரசு தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். நான் ஒரு ஏழை. இதனால் எந்த காரணம் கொண்டும் பொய்யான வழக்கில் சிக்க வைக்க கூடாது. நாங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்பட்டு வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வருமான வரித்துறை அலுவலகம் சென்றார். அப்போது அவரிடம், ‛‛உங்களின் தனிப்பட்ட ஆவணங்களை யாருக்கேனும் வழங்கினீர்களா? '' என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ‛‛வழங்கவில்லை'' என்று கூறினார். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2022ம் ஆண்டில் பஞ்சாப் சட்டசபை தேர்தலின்போது ரஹீஸின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. அதற்கு ரஹீஸின் ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications