"போதும்.. வாயை மூடு!" மகனை இழந்து கதறும் தாயை நோக்கி.. ஆவேசமாக கத்திய அதிகாரி.. உபி ஷாக் சம்பவம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மகனை இழந்த தாயை நோக்கி, அரசு அதிகாரி ஒருவர் ஆவேசமாகக் கத்தும் வீடியோ இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் அனுராக் பள்ளிக்குச் செல்ல தயாராகி உள்ளார். 10 வயதான அனுராக் வழக்கம் போலப் பள்ளி பேருந்தில் ஏறி உள்ளார்.
அப்போது அச்சிறுவனுக்கு திடீரென குமட்டல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜன்னல் வழியாக வாந்தி எடுக்க அச்சிறுவன் வெளியே சாய்ந்துள்ளான்.

மாணவர் உயிரிழப்பு
இதைக் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தைத் தொடர்ந்து இயக்கி உள்ளார். அப்போது சிறுவன் வெளிப்புறம் சாய்ந்து இருந்ததால் எதிர்பாராத விதமாகச் சிறுவனின் தலை மின்கம்பத்தில் மோதி உள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெற்றோர் போராட்டம்
இந்தச் சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் மற்றொரு பஸ் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். டெல்லிக்கு அருகே மோடிநகரில் உள்ள காவல்நிலையத்தில் உயிரிழந்த மாணவர் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

கதறி அழுத தாய்
இந்நிலையில், போராடும் பெற்றோரை சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் முதலில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபாங்கி சுக்லா, அனுராக்கின் தாயை சாமாதானம் செய்ய முயல்கிறார். இருப்பினும், சற்று நேரத்திலேயே பொறுமை இழக்கும் மாஜிஸ்திரேட் ஷுபாங்கி சுக்லா, "ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்? கொஞ்சம் அமைதியாக இருங்கள்," என்று கத்துகிறார். அதற்கு அழுத கொண்டு இருக்கும் அந்த தாய், "உயிரிழந்தது உன் மகனா?" எனக் கேட்கிறார்.

ஆவேசமான அதிகாரி
இதனால் மேலும் கோபம் அடையும் மாஜிஸ்திரேட் ஷுபாங்கி சுக்லா, "நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா? எத்தனை முறை தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்" என்கிறார். அதற்கு மாணவரின் தாயார், "எனக்குப் புரிந்தது போதும். அவன் (மாணவர்) இப்போது அமைதியாக இருக்கிறார்" என்று பதிலளித்தார். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உபி முதல்வர்
இந்த சம்பவம் விஸ்வரும் எடுத்துள்ள நிலையில், சம்பவத்தில் தலையிட்ட உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அறிக்கை கோரி உள்ளார். மேலும், அனைத்து பள்ளி பஸ் ஊழியர்களின் உடற்தகுதியைச் சரிபார்க்கவும் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி கூறினார்.

பெற்றோர் குற்றச்சாட்டு
பேருந்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதே மாணவர் உயிரிழப்பிற்குக் காரணம் என்று அனுராக்கின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். பேருந்தில் அதிக மாணவர்கள் இருந்ததாகவும் அவர்களை யாரும் கண்காணிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். அனுராக்கின் தாய் டிரைவரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியே பள்ளி முதல்வர், நிர்வாகம் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரி விளக்கம்
அதேநேரம் அதிகாரி சுக்லா வேறு மாதிரியான விளக்கத்தை அளித்துள்ளார். பேருந்தில் குமட்டல் ஏற்பட்ட போது, ஆசிரியரிடம் மாணவர் செல்லவில்லை என்றும் பேருந்தில் இருந்த சீட்களை விடக் குறைவான மாணவர்களே இருந்தனர் என்றும் அவர் கூறினார். அதேநேரம் பள்ளி பேருந்திற்கு முறையான சான்றிதழ் இல்லை என்றும் சுக்லா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications