"உபி-இல் இந்த கட்சிக்கு தான் விவசாயிகளின் வாக்கு.." மனம் திறக்கும் ராகேஷ் டிக்கைட்.! ஏன் முக்கியம்?
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்கும் நிலையில், விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் ஆளும் தரப்பை விமர்சித்துப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10இல் தொடங்கி 5 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாகவே அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாகச் செய்து வருகிறது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலம் என்பதாலும் கடந்த கால தேர்தல்களில் அங்கு இதுவரை எந்தவொரு ஆளும் கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதில்லை என்பதாலும் உத்தரப் பிரதேச தேர்தல் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி: யோகி கட்டாயம் ஜெயிக்கனும்.... ஏன் தெரியுமா? விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத் செம்ம நக்கல்!
ராகேஷ் டிக்கைட்
குறிப்பாக மத்திய அரசின் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிட தகுந்த விவசாயிகள் மேற்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட போதிலும் இவர்கள் ஆளும் தரப்பு மீது அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் இவர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்தச் சூழலில் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் ஆளும் தரப்பை விமர்சித்துப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மின் கட்டணம்
இது குறித்து ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "உத்திர பிரதேசத்தில் உள்ள வாக்காளர்கள் விவசாயிகளின் நலன் பற்றிப் பேசுபவர்களுக்கு மட்டுமே ஆதரவளிப்பார்கள். மதங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்துவோரின் முயற்சி பயனளிக்காது. உ.பி.யில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குக் குறைவான விலையையே பெறுகின்றனர். ஆனால் அதிக மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டிய சிக்கலான காலத்தில் உள்ளோம்.
இந்து முஸ்லீம்
தேர்தல் காலத்தில் விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவை தான் முக்கிய பிரச்சினை. ஆனால் வழக்கம் போல ஜின்னா மற்றும் பாகிஸ்தான் குறித்து வெறுப்பைப் பரப்பும் பேச்சுகள் மூலம் இந்து-முஸ்லிம் வாக்காளர்களைப் பிரிக்கச் சிலர் முயல்கின்றனர். ஆனால் இந்த முறை இது பலன் அளிக்காது. இது அவர்களுக்கே சிக்கலாக முடியும்" என்றார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை ஜின்னாவை வழிபடுபவர் எனச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரம்
கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில தேர்தலில் விவசாய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். அதேபோல இந்த முறை பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "அந்த 3 விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை. நான் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. அரசியல் கட்சிகளில் இருந்து எப்போதும் ஒதுங்கியே இருக்கிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை மட்டுமே பேசுவேன். அரசியல் தலைவர்களிடம் விவசாயிகளின் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்புவேன்.
யாருக்கு வாக்கு
தேர்தல் எப்படி இருக்கும். எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பது குறித்து எல்லாம் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இருப்பினும், நான் செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயிகள் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றே கூறி வருகின்றனர். அதேபோல வேலைவாய்ப்பின்மையும் இங்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து, யார் உண்மையான பிரச்சினைகளை பேசுகிறார்களோ அந்தக் கட்சிக்கு தான் விவசாயிகள் இந்த முறை வாக்களிப்பார்கள்.
ஆளும் தரப்பு
வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது மாஜிஸ்திரேட் மற்றும் போலீசாரை மக்கள் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சாதகமாகச் செயல்படலாம். எந்தவொரு அரசியல் கட்சி விவசாயிகளுக்கு எதிராக இல்லையோ அவர்களுக்குத் தான் விவசாயிகள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். வெறுப்பு பேச்சுகளைப் பேசுபவர்களைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளை பேசுவோருக்கே வாக்களிப்போம்" என்றார்.
ஏன் முக்கியம்
ராகேஷ் டிக்கைட்டின் இந்த பேச்சு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள முக்கியமான விவசாய தலைவர்களில் முதன்மையானவர் ராகேஷ் டிக்கைட். கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் இங்குள்ள இந்து சமூகத்தினர் வாக்குகள் அப்படியே பாஜக பக்கம் சென்றது. இதனால் தான் இங்குக் கடந்த முறை பாஜகவால் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. விவாசியகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் ஆகியவற்றால் ஆளும் தரப்பு மீது விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள 76 இடங்களில் பெரும்பான்மை இடங்கள் யாருக்கு கிடைக்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.